LATEST NEWS
அடக்கடவுளே..! யானைக்கு வெல்லம் கொடுக்க முயன்றவருக்கு நேர்ந்த கொடூரம்.. தும்பிக்கையால் சுருட்டி வீசி, மிதித்துக் கொன்ற ஆக்ரோஷ யானை – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தோரின் ராஜ் நகர் பகுதியில், யானைக்கு வெல்லம் ஊட்ட முயன்ற 49 வயது ஆட்டோ ஓட்டுநர் விஜய் யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உஜ்ஜைனியில் இருந்து சமண மத வழிபாட்டு நிகழ்ச்சி ஒன்றிற்காக இந்த யானை இந்தோருக்கு அழைத்து வரப்பட்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்த பிறகு, பாகனுடன் சேர்ந்து அந்த யானை ராஜ் நகர் குடியிருப்புப் பகுதியில் காணிக்கை பெறுவதற்காக உலா வந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சனிக்கிழமை மாலை 4:30 மணியளவில், விஜய் என்ற அந்த நபர் யானைக்கு வெல்லம் கொடுக்க அருகில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த யானை திடீரென ஆக்ரோஷமடைந்து அவரைத் தாக்கியது. யானை தனது தும்பிக்கையால் விஜயைச் சுருட்டிப் பிடித்து, தூக்கி தரையில் வீசியதோடு, அவரது நெஞ்சுப் பகுதியில் மிதித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, ஆபத்தான நிலையில் முதலில் மாவட்ட மருத்துவமனைக்கும், பின்னர் தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். ஆனால், தீவிர சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை நள்ளிரவில் அவர் உயிரிழந்தார்.
விபத்து நடந்த சமயத்தில் விஜய் மதுபோதையில் இருந்ததாகக் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சந்தன் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். யானையின் பாகனைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வரும் போலீஸார், குடியிருப்புப் பகுதிக்குள் யானையை அழைத்து வரும்போது முறையான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
