LATEST NEWS
சீறிப்பாய்ந்த நேபாள வெள்ளம்! குட்டிகளுக்காக உயிரைப் பணயம் வைத்த தாய் யானைகள்… நெஞ்சை உலுக்கும் காட்சி..!!
நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, ஐந்து காட்டு யானைகள் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு, உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் உள்ள கிரிஜாபுரி அணைக்கட்டு அருகே வரை தத்தளித்தபடி வந்தன. இந்த யானைக் கூட்டத்தில் மூன்று பெரிய யானைகளும் இரண்டு குட்டி யானைகளும் இருந்தன. ஆக்ரோஷமாகப் பாய்ந்து வந்த வெள்ள நீரில் சிறிய குட்டி யானைகள் மிதக்க முடியாமல் தண்ணீருக்குள் மூழ்கி உயிருக்காகப் போராடின.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், பெரிய யானைகள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தனியாக ஓட நினைக்காமல், ஆபத்தில் சிக்கிய குட்டிகளை இறுதிவரை கைவிடாமல் தங்களோடு அரவணைத்துக் கொண்டன. அணைக்கட்டை நோக்கி யானைகள் வேகமாக அடித்து வரப்பட்டதால், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த வனத்துறையினர் மற்றும் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் உடனடியாக கூட்டு மீட்புப் பணியில் களம் இறங்கினர். அதிகாரிகள் அணைக்கட்டின் வழியே வெளியேறும் நீரின் வேகத்தைக் குறைத்து, யானைகள் தப்பிப்பதற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கினர்.
https://twitter.com/rameshpandeyifs/status/2092165398045319616/video/1
வெள்ளத்தின் வேகம் சற்றே குறைந்ததும், மீட்புக் குழுவினர் மிகவும் சாதுரியமாகச் செயல்பட்டு யானைக் கூட்டத்தை ஆற்றின் கரையோரமாகப் பாதுகாப்பாக வழிநடத்திச் சென்றனர். அதிகாரிகளின் இந்த அதிரடி மற்றும் ஒருங்கிணைந்த முயற்சியால், இரண்டு குட்டிகள் உட்பட ஐந்து யானைகளும் வெள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள பாதுகாப்பான காட்டுப் பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆபத்துக் காலத்திலும் குட்டிகளைப் பிரியாத இந்த யானைகளின் பாசப் பிணைப்பு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
