LATEST NEWS
“பழசையே பேசாதீங்க விஜய் சார்.. முழக்கம் மட்டும் போதுமா..?” மேடையில் வெடித்த அன்புமணி.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு!
விக்கிரவாண்டியில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு கடந்த கால ஆட்சிகளின் குறைகளையும், கமிஷன் விவகாரங்களையும் மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், மாநிலத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மாநிலத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பட்டதாரி இளைஞர்கள் வேலையில்லாமல் தவிப்பதாகவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதன் மூலமே போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், வெறும் முழக்கங்களோடு நின்றுவிடாமல் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற முக்கிய அம்சங்களுக்கான அடுத்தகட்ட திட்டங்களை அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆளுங்கட்சியின் நிர்வாகக் குளறுபடிகளை அன்புமணி ராமதாஸ் விமர்சித்த போதிலும், பாமகவின் 46 ஆண்டுகால கோரிக்கையான சாதிவாரி கணக்கெடுப்பை ‘சமூக நீதிச் சர்வே’ என்ற பெயரில் நடத்த தவெக அரசு முன்வந்ததற்குப் பாமக பகிரங்கமாக வரவேற்பு அளித்திருந்தது. சட்டப்பேரவையிலும் வெளியிலும் அன்புமணி ராமதாஸ் மற்றும் சௌமியா அன்புமணி ஆகியோர் தவெக அரசின் சில கொள்கை முடிவுகளுக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் பாமகவின் ஆதரவைப் பெறப் பல்வேறு தரப்பினரும் முயன்று வரும் வேளையில், தவெக அரசுடன் பாமக காட்டி வரும் இந்த இணக்கமான அரசியல் நகர்வுகள், வரவிருக்கும் தேர்தல்களில் ஒரு புதிய அரசியல் கூட்டணி உருவாவதற்கான அறிகுறியா என்ற பெரும் எதிர்பார்ப்பைத் தமிழக அரசியலில் ஏற்படுத்தியுள்ளது.
