LATEST NEWS
“ஊரே சிரிக்குது.. மீண்டும் உனக்கு MLA பதவி ஒரு கேடா?” ஓடுகாலி இசக்கி சுப்பையாவே… அ.தி.மு.க-வினர் ஒட்டிய பகீர் போஸ்டரால் பரபரப்பு..!!
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அம்பாசமுத்திரம் முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவைக் கண்டித்து, நெல்லை மற்றும் அம்பாசமுத்திரம் பகுதிகளில் அதிமுகவினர் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா உட்பட 7 எம்.எல்.ஏக்கள், பின்னர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் விரக்தியடைந்த இசக்கி சுப்பையா, இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வரை தன்னை மீண்டும் எம்.எல்.ஏவாகத் தொடர அனுமதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்; ஆனால், நீதிமன்றம் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
இந்தச் சூழலில்தான் நெல்லையில் அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டரில், “ஊரே சிரிக்குது உன்னைப் பார்த்து… அம்பை தொகுதி மக்களின் தீர்ப்பை மதிக்காத ஓடுகாலி இசக்கி சுப்பையாவே! உனக்கு எம்.எல்.ஏ பதவி ஒரு கேடா?” என மிகக் கடுமையான வார்த்தைகளால் அவரைச் சாடியுள்ளனர். மக்கள் பணியில் எப்போதும் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக தொண்டர்கள் இருப்பார்கள் என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டிகள், அப்பகுதியில் தற்போது கடுமையான அரசியல் விவாதத்தை உசுப்பியுள்ளது.
