LATEST NEWS
“முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர் சுமக்கும் நாள் தூரமில்லை..!” புல்லட் ரயில் திட்டத்திற்கு மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி எச்சரிக்கை..!!!
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்காக, 132 கிலோவாட் மின் பரிமாற்றப் பாதை அமைப்பதற்காக 847 சதுப்புநில மரங்களை வெட்ட மகாராஷ்டிர மாநில மின்சார பரிமாற்ற நிறுவனம் அனுமதி கோரியிருந்தது. இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி ரவீந்திர குகே மற்றும் நீதிபதி கௌதம் அன்காட் ஆகியோர் அடங்கிய அமர்வு, “ஏற்கனவே மும்பையில் ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக உள்ளது. மக்கள் தங்களுக்குத் தேவையான ஆக்சிஜனைப் பெற, மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை ஆக்சிஜன் சிலிண்டர்களைத் தங்கள் முதுகில் சுமந்து செல்லும் நாள் இன்னும் வெகுதொலைவில் இல்லை” என்று சதுப்புநிலக் காடுகள் அழிப்பு குறித்து தங்களது கடுமையான அதிருப்தியைத் தெரிவித்தனர்.
அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் மிலிந்த் சாத்தே, மரங்களை வெட்டுவதற்குப் பதிலாக வேறு இடங்களில் மரங்களை நட அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார். ஆனால், இதனை கடுமையாக விமர்சித்த நீதிமன்றம், “நீங்கள் மரங்களையோ, செடிகளையோ நட்ட பிறகு அது உயிருடன் இருக்கிறதா என்று கூட திரும்பிப் பார்ப்பதில்லை; ஏதோ ஒன்றை நட்டுவிட்டோம் என்ற தோற்றத்தை மட்டுமே உருவாக்குகிறீர்கள்” என்று சாடியது. இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு, மரங்களை வேறு எங்கும் நடாமல், அதே பகுதியில் உள்ள சீரழிந்த காட்டு நிலங்களை கண்டறிந்து காடுகளை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அக்டோபர் மாதம் பிரதமர் புல்லட் ரயில் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளதால் இந்த மின் பரிமாற்ற வழித்தடம் அவசரமாகத் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்தது.
காடுகளுக்குக் குறைந்தபட்ச பாதிப்பு ஏற்படும் வகையில்தான் இந்த வழித்தடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அரசு குறிப்பிட்டதை அடுத்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இந்தத் திட்டத்திற்கு உடனடியாகத் தடை விதிக்கவில்லை. இருப்பினும், வெட்டப்படும் மரங்களை ஈடுசெய்யும் வகையில் காடுகளை வளர்ப்பதற்கான முறையான வழிமுறைகளை ஆராய உத்தரவிட்டு, இந்த வழக்கின் மீதான தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. 2018-ஆம் ஆண்டின் மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, நீதிமன்ற அனுமதியின்றி சதுப்புநிலக் காடுகளை அழிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
