LATEST NEWS
டேட்டிங் ஆப்பில் விரித்த வலை…ஆபாச வீடியோ கால் மூலம் பிளாக்மெயில்… சைபர் மோசடியில் சிக்கிய இளம் கிரிக்கெட் வீரர்..! அதிர்ச்சி பின்னணி..!!
மகாராஷ்டிராவைச் சேர்ந்த வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர், போட்டி நிமித்தமாக பெங்களூருக்கு வந்து வட பெங்களூரில் உள்ள ஒரு பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது, பிரபல டேட்டிங் செயலி மூலம் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அந்தப் பெண் வீடியோ காலில் தோன்றி ஆபாசமாக நடந்து கொண்டதோடு, கிரிக்கெட் வீரரையும் ஆடைகளைக் களையும்படி தூண்டியுள்ளார். அவர் கூறியதை நம்பி வீரர் செயல்பட்ட நிலையில், அந்தப் பெண் வெறும் 30 வினாடிகளிலேயே அந்த காட்சிகளைப் பதிவு செய்து வீடியோ காலைத் துண்டித்துள்ளார்.
வீடியோ கால் துண்டிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி மற்றும் ஸ்கிரீன்ஷாட்களை அந்தப் பெண் அடங்கிய கும்பல் கிரிக்கெட் வீரரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பியுள்ளது. அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவரது கிரிக்கெட் வாழ்க்கையையும் புகழையும் அழித்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த கிரிக்கெட் வீரர், தனது மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஆரம்பத்தில் மோசடி கும்பல் கேட்டவாறே பல லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். இருப்பினும், பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகும் மோசடி கும்பலின் மிரட்டல் நிற்காமல், தொடர்ந்து கூடுதல் பணம் கேட்டு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
தொடர் பிளாக்மெயிலால் அதிர்ச்சியடைந்த அந்த கிரிக்கெட் வீரர், தனது நண்பர்களிடம் ஆலோசித்து பெங்களூரு வடக்கு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் மோசடிப் பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து சைபர் காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்; அதில், AI மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இதுபோன்ற ஆபாச வீடியோ மிரட்டல் மோசடிகள் அதிகரித்து வருவதால், அறிமுகமில்லாத நபர்களின் வீடியோ கால்களைப் பேசுவதையும், டேட்டிங் செயலிகளில் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
