CINEMA
“அவ்ளோ பட்ஜெட் எங்ககிட்ட இல்லப்பா…!ஜாதி, மதம் கிடையாது… அவர் எல்லைச்சாமி…!” -மக்கள் ஏன் தியேட்டரில் சாமி ஆடுகிறார்கள்? ஆர்.ஜே. பாலாஜி உடைத்த சுவாரசிய பின்னணி…!
கடந்த சில திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால், நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் ஒரு மாபெரும் வெற்றிக்கான தேவை மிக அவசியமாக இருந்தது. அந்தப் பெரும் குறையை தற்போது இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் நிவர்த்தி செய்துள்ளது. ரசிகர்களின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பி வரும் இத்திரைப்படம், வெளியான முதல் வாரத்திலேயே உலகளவில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலாகி இருப்பது சூர்யாவின் அசுரத்தனமான பாக்ஸ் ஆபிஸ் பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.
படம் தியேட்டர்களில் திருவிழா போல கொண்டாடப்பட்டு வரும் வேளையில், தியேட்டர்களில் படம் பார்த்துவிட்டு சிலர் சாமி ஆடுவது போன்ற வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன. ஆனால், “இப்படி சாமி ஆடுபவர்கள் அனைவரும் படத் தயாரிப்பாளர் காசு கொடுத்து தியேட்டருக்கு அனுப்பிய ஆட்கள் தான்” என சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சிக்கத் தொடங்கினர். இந்த விமர்சனங்களுக்கு இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி தனது பாணியில் நச்சென்று பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “எங்களால் அந்த அளவுக்கு பட்ஜெட் செலவு செய்து, தியேட்டர் தியேட்டராக ஆட்களை அனுப்பி இருக்க முடியாது. அப்படி ஆள் அனுப்பியிருந்தால் அது படத்தோட மொத்த பட்ஜெட்டை விட அதிகமாக இருந்திருக்கும்” என நக்கலாகக் குறிப்பிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும், படத்தின் மையக்கருத்தான எல்லைச் சாமி குறித்துப் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “கருப்புசாமி என்பது ஊர் எல்லைச்சாமி. அதற்கு ஜாதி, மதம் என்ற எந்தப் பாகுபாடும் கிடையாது. ஊரை விட்டு வெளியூருக்குப் போகும் போதும் சரி, மீண்டும் ஊருக்குள் வரும் போதும் சரி, மக்கள் அனைவரும் கும்பிட்டுவிட்டுப் போகும் பொதுவான சாமி அது. அதனால் தான் தியேட்டருக்கு வரும் அனைவரும் இதைத் தங்கள் சொந்த சாமியாக நினைத்து, படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். மக்களின் இந்த பேராதரவைக் காண்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
