CRIME
இப்படியொரு மூடநம்பிக்கையா?.. கோவிலுக்குள் நடந்த பயங்கரம்.. ‘சூனியக்காரி’ முத்திரை குத்தி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் மாயாபூர் கிராமத்தில், ஒரு சிறுமிக்கு ‘சூனியக்காரி’ என முத்திரை குத்தப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு, சூடான இரும்புக் கம்பியால் உடலின் பல இடங்களில் சூடு போடப்பட்ட மனிதாபிமானமற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ராம்பியாரி, வயலில் வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில், சில கிராமவாசிகள் சிறுமியை வலுக்கட்டாயமாக அங்குள்ள மாதாஜி கோவிலுக்கு இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு சூரஜ் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல், அச்சிறுமியைச் சூனியக்காரி என்று கூறித் தாக்கியதோடு, இரும்புப் பொருளைப் பழுக்கக் காய்ச்சிச் சிறுமியின் உடலில் பல இடங்களில் சுட்டுக் காயப்படுத்தியுள்ளனர். மேலும், இதை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இக்கொடூர சம்பவம் குறித்துச் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மங்லியாவாஸ் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான உதவி ஆய்வாளர் ஹுகும் சிங் ரத்தோட் கூறுகையில், புகாரைத் தொடர்ந்து சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யத் திட்டமிடப்பட்டதாகவும், ஆனால் அவர் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு வரத் தவறியதால் அது தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சிறுமி வந்தவுடன் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, காயங்கள் உறுதிப்படுத்தப்படும் என்றும், பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
