LATEST NEWS
“மத்திய அரசு ஓகே சொல்லியும் விஜய் அரசு முட்டுக்கட்டை போடுவது ஏன்?.. தவெக-வுக்கு எதிராகக் களமிறங்கிய பா.ஜ.க.. நயினார் நாகேந்திரன் காரசார அட்டாக்.. பரபரக்கும் தமிழக அரசியல்”..!!
பரந்தூர் விமான நிலையப் பணிகளைத் தாமதப்படுத்தாமல் உடனே தொடங்க மத்திய அரசுக்குத் தமிழக அரசு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், இத்திட்டத்தை முடக்கும் முயற்சியில் ஜோசப் விஜய் அரசு இறங்கியிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை நீர்நிலைகளைக் கணக்கில் கொண்டு, விரிவான ஆய்வுகளுக்குப் பிறகே இதற்கு கொள்கை அளவிலான அனுமதியை வழங்கின என்றும், அவ்வாறிருக்கையில் ‘ஓடுதளம் அமைக்க முடியாது’ என்று தவெக அமைச்சர் நிர்மல்குமார் கூறுவது அப்பட்டமான பொய் மற்றும் தமிழகத்தின் எதிர்காலத்திற்குச் செய்யும் துரோகம் என்றும் அவர் சாடியுள்ளார்.
தொழில்நுட்ப நிபுணர் குழுக்கள் நீர்நிலைகளைப் பாதுகாத்து ஓடுதளம் அமைப்பதற்கான பொறியியல் தீர்வுகளை ஏற்கனவே பரிந்துரைத்திருக்கும் போது, இப்போது திடீரெனப் புதிய சிக்கலை உருவாக்குவது மலிவான ஓட்டு வங்கி அரசியலுக்காக மாநிலத்தின் வளர்ச்சியைப் பலியிடும் செயல் என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இட நெருக்கடி காரணமாக சென்னை விமான நிலையத்தை மேலும் விரிவுபடுத்த இயலாத தற்போதைய சூழலில், பரந்தூர் திட்டத்தைத் தாமதப்படுத்துவது தமிழகத்தின் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை முற்றிலுமாகப் பறித்துவிடும் என்றும், எனவே அரசியல் காரணங்களுக்காக மாநிலத்தின் வளர்ச்சியை முடக்காமல், மத்திய அரசுடன் இணைந்து இத்திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
