CRIME
“பெத்த தாயை போய் இப்படி செய்யலாமா?” பெத்த மனசு என்ன பாடுபடும்.? சொத்துக்காகப் பார்வையற்ற அம்மாவின் முகத்தில் மிதித்த மகன்.. நெஞ்சை உலுக்கும் திருப்பத்தூர் கொடூரம்..!
திருப்பத்தூர் மாவட்டம் விசமங்கலம் அருகே சொத்து தகராறில் மதுபோதையில் அத்துமீறி நுழைந்து, சண்டையைத் தடுக்க முயன்ற பெற்ற தாய் என்றும் பாராமல் பார்வையற்ற முதியவரின் முகத்தில் காலால் எட்டி உதைத்துக் கீழே தள்ளிய மகனின் கொடூரச் செயல் சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசமங்கலம் சித்தேரி பகுதியைச் சேர்ந்த மறைந்த மனோகரனின் மூத்த மகன் கோபி என்பவரே இந்த அதிர்ச்சி தரும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். மனோகரன் உயிரிழப்பதற்கு முன்பு தனது 1 ஏக்கர் 70 சென்ட் நிலத்தைத் தனது இரு மகன்களான கோபி மற்றும் ஜோதிராஜுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுத்துள்ளார்.
தம்பி ஜோதிராஜ் தனக்குக் கிடைத்த 85 சென்ட் நிலத்தில் வீடு கட்டி, பார்வை இழந்த தனது தாய் விஜயலட்சுமியைத் தன்னுடன் வைத்துப் பராமரித்து வந்துள்ளார். ஆனால் பேராசை பிடித்த அண்ணன் கோபி, தம்பியின் நிலத்தையும் தனக்கே தர வேண்டும் எனத் தொடர்ந்து வற்புறுத்தி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூலை 7-ஆம் தேதி அன்று முழு போதையில் ஜோதிராஜ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கோபி, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கித் தம்பியிடம் பயங்கர மோதலில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த பார்வையற்ற தாய் விஜயலட்சுமி சண்டையைத் தடுக்க முயன்றபோது, கோபி அவரது முகத்தில் காலால் எட்டி உதைத்துக் கீழே தள்ளித் தம்பி ஜோதிராஜையும் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த தாயும் தம்பியும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து ஜோதிராஜ் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள போதிலும், இதுவரை காவலாளர்கள் கோபி மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
