LATEST NEWS
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. இனி கடைகளில் குருணை அரிசிக்கு குட்பை.. மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு..!!
இந்திய மத்திய உணவுக் கழகத்தின் வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது கோதுமை, நெல் மற்றும் சிறுதானியங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த உணவுத்தானியங்களின் இருப்பு 122.64 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. இந்த இமாலய இருப்பில் உள்ள 68.34 மில்லியன் டன் அரிசியானது, அந்தந்த மாநிலங்களின் தேவைக்கேற்பப் பிரிக்கப்பட்டு, ரேஷன் கடைகள் வாயிலாக மக்களுக்குத் தங்குதடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், ரேஷன் அரிசியின் தரத்தை உயர்த்தும் நோக்கில், அதில் கலந்துள்ள உடைந்த அரிசியின் அளவைக் கணிசமாகக் குறைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ‘ஆர்.எம்.டி’ என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரக்குழு தனது அதிகாரப்பூர்வ ஒப்புதலை வழங்கியுள்ளது.
மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி, இனி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசியில் உடைந்த அரிசியின் அளவு பெருமளவு தவிர்க்கப்படும். அதற்குப் பதிலாக, நுகர்வோருக்குத் தரமான முழு அரிசி மட்டுமே நேரடியாகச் சென்றடைவதை இந்த புதிய விதிமுறைகள் உறுதி செய்கின்றன. அதன்படி, பச்சை அரிசியில் இதுவரை 25 சதவீதமாக இருந்த உடைந்த அரிசியின் அளவு இனி 10 சதவீதமாகக் குறைக்கப்படும்; அதேபோல் புழுங்கல் அரிசியில் 16 சதவீதமாக இருந்த உடைந்த அரிசியின் அளவு இனி 5 சதவீதமாகக் குறைக்கப்படும். ஆந்திர மாநிலத்தில் சோதனை அடிப்படையில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின்படி, நெல் அரைக்கும்போது கிடைக்கும் உடைந்த அரிசி ஆலைகளிடமே ஒப்படைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படும் முறை தற்போது நாடு தழுவிய அளவில் நடைமுறைக்கு வரவுள்ளது.
