CRIME
20 முறைக்கு மேல் வெடித்த துப்பாக்கிச் சத்தம்.. ரத்த வெள்ளத்தில் சரிந்த விவசாயி…! என்ன நடக்கிறது அங்கே..? மணிப்பூரில் பரபரப்பு பின்னணி…!!!
மணிப்பூர் மாநிலம், காங்போக்பி மாவட்டத்தில் உள்ள கோவாஜங் கிராமத்தைச் சேர்ந்த 53 வயது விவசாயியான ஹவோலால் சிங்சித் என்பவர், தனது நெல் வயலில் மனைவியுடன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய கும்பல் ஒன்று அவர்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஹவோலால் சிங்சித் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சுமார் 20 முறைக்கும் மேலாக துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் கொடூர தாக்குதலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளை உள்ளடக்கிய கூட்டுப் பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்தனர். உயிரிழந்த விவசாயியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள், கொலைக்கான காரணம் குறித்தும், தாக்குதல் நடத்திய கும்பல் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலையாளிகளைப் பிடிப்பதற்காக அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுற்றியுள்ள கிராமங்களில் மீண்டும் பலத்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் மெய்தேய் மற்றும் குக்கி இனக்குழுக்களுக்கு இடையே பழங்குடியின அந்தஸ்து தொடர்பாகத் தொடங்கிய இனக்கலவரம் இன்னும் முழுமையாக ஓய்ந்தபாடில்லை. இந்த வன்முறையில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர். மாநிலத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும், பல்வேறு ஆயுதக் குழுக்களின் இத்தகைய தொடர் அட்டகாசங்கள் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்கள் அங்கு இன்னும் தொடர்ந்து வருகின்றன.
