LATEST NEWS
திமுக மாஜி அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது நில அபகரிப்பு புகார்.. அதிரடி விசாரணையில் இறங்கிய போலீஸ்..!!
திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது சென்னை பரங்கிமலையில் நில அபகரிப்பு புகார் செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவன உரிமையாளரான ராஜேஷ் சோமசுந்தரம் என்பவர் அளித்த புகாரில், கடந்த 2024 மக்களவைத் தேர்தலின்போது தேர்தல் பணிமனை அமைப்பதற்காகத் தனது 5,500 சதுரடி நிலத்தை அன்பரசனின் உதவியாளர்கள் 6 மாத குத்தகைக்கு எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், குத்தகை காலம் முடிந்தும், கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடகை தராமலும், இடத்தை காலி செய்ய மறுத்தும் போலி முகவரி கொடுத்து ஏமாற்றியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இந்த நிலத்தை விலைக்குத் தருமாறு முன்னாள் அமைச்சர் அன்பரசன் நேரில் கேட்டுக்கொண்டதாகவும், அதற்குத் தான் மறுப்புத் தெரிவித்துவிட்டதாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது. அன்பரசனின் பின்னணியில்தான் இந்த நில அபகரிப்பு நடந்துள்ளதாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளிக்கப்பட்ட இந்த புகார் மனு, தற்பொழுது பரங்கிமலை காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இப்புகாரின் அடிப்படையில் சி.எஸ்.ஆர். பதிவு செய்யப்பட்டு, போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
