LATEST NEWS
“நான் திருடல.. என அழுதும் கேட்காத ஆசிரியர்கள்..! 10 ரூபாய் திருட்டுப் பழியால்… 4-ம் வகுப்புச் சிறுமி தூக்கில் தொங்கிய கொடூரம்..!!”
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரின் நியூ மண்டி காவல் எல்லைக்குட்பட்ட பசண்டா கலா கிராமத்தில், 10 ரூபாய் திருடியதாகக் கூறி ஆசிரியர் தாக்கியதால் மனமுடைந்த 10 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அரசு தொடக்கப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்த அந்தச் சிறுமி, பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
சிறுமியின் தந்தை அசோக் ராஜ்புத் மற்றும் குடும்பத்தினரின் கூற்றுப்படி, பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை சவிதா என்பவர் சிறுமியின் பையிலிருந்து 10 ரூபாய் திருடப்பட்டதாக சந்தேகம் எழுப்பியுள்ளார். அதன்பின்னர், ஆசிரியர் ராஜீவ் என்பவர் வகுப்பறையில் வைத்து அந்த சிறுமியை சக மாணவர்கள் முன்னிலையில் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேஜைக்கு அடியில் கிடந்த 10 ரூபாயை எடுத்ததாகச் சிறுமி விளக்கியும், ஆசிரியர் அடித்து துன்புறுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி இத்தகைய முடிவை எடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் விரிவான விசாரணைக்குப் பிறகு தவறு செய்த ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
