LATEST NEWS
எங்களால எண்ணெய் விற்க முடியாவிட்டால்… வேறு யாரும் கச்சா எண்ணெய் விற்க முடியாது… அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள கடைசி எச்சரிக்கை..!!
‘எங்களால் எண்ணெய் விற்க முடியாவிட்டால், பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் கச்சா எண்ணெயை விற்க முடியாது’ என்று ஈரான் நாடு அமெரிக்காவிற்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அமெரிக்காவுடனான போர் மற்றும் மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகரும் அந்நாட்டின் தலைமை பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த போரின் நிலைப்பாடு “ஒன்று அனைத்தும் அல்லது எதுவுமே இல்லை” என்ற ஒற்றை இலக்கை நோக்கி நகர்வதாக அவர் அதில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சர்வதேச வர்த்தகக் கப்பல்களை ஈரான் தாக்கும் ஒவ்வொரு முறைக்கும் பதிலடியாக, ஈரானில் உள்ள ஒரு பாலம் அல்லது மின் உற்பத்தி நிலையத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தார். ட்ரம்பின் இந்த கடுமையான எச்சரிக்கை வெளியான சில மணிநேரங்களிலேயே ஈரான் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரானின் பாதுகாப்புக்கு முழுமையான உத்தரவாதம் அளிக்கப்படாவிட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு உள்கட்டமைப்பும் பாதுகாப்பாக இருக்காது என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
மேலும், உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையானது, அந்தப் பகுதியில் அமெரிக்கப் படைகள் இல்லாத ஒரு சூழலில் மட்டுமே முழுமையான பாதுகாப்புடன் இருக்கும் என்று முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார். இந்த நீரிணையின் தற்போதைய பதற்றமான நிலைமை, மீண்டும் போருக்கு முந்தைய இயல்பு நிலைக்குத் திரும்பாது என்பதைத் தாங்கள் பலமுறை தெளிவுபடுத்தி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் இந்த மோதல் போக்கு, உலகளாவிய எண்ணெய் சந்தையிலும் பெரும் தாக்கத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
