LATEST NEWS
பவுடர் தடவி, விளக்கேற்றி… இறந்த தாயின் சடலத்துடன் 5 நாட்கள்.. மகன் செய்த காரியத்தால் ஊரே நடுங்கிய சம்பவம்..!!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்துப்புழா பகுதியில், இறந்துபோன தாயின் உடலை இறுதிச் சடங்கு செய்யாமல் வீட்டிலேயே வைத்து அவரது மகன் தொடர்ந்து பூஜை செய்து வந்த விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அரசுத் தோட்டக் குடியிருப்பில் வசித்து வந்த 90 வயது முதியவரான சின்னத்தாம்மாள் வயது முதிர்வு காரணமாகக் கடந்த புதன்கிழமை காலமானார். ஆனால், அவருடன் வசித்து வந்த அவரது மகன் கிருஷ்ணசாமி (62), தாயின் மரணத்தை யாரிடமும் தெரிவிக்காமல் ரகசியமாக மறைத்துள்ளார்.
தாயின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாத கிருஷ்ணசாமி, சடலத்தை ஒரு வெள்ளைத்துணியால் மூடி, பவுடர் தடவி, அருகில் விளக்கேற்றித் தொடர்ந்து சிறப்புப் பூஜைகளைச் செய்து வந்துள்ளார். வீட்டில் இருந்து தொடர்ந்து ஊதுபத்தி மற்றும் சந்தன நறுமணம் வந்து கொண்டிருந்ததால் அக்கம் பக்கத்தினருக்குச் சந்தேகம் எழவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் அவரது மகள் திடீரென வீட்டிற்கு வந்து பார்த்தபோது, படுக்கையறையில் பாட்டியின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக உறவினர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குளத்துப்புழா போலீசார், சின்னத்தாம்மாளின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகப் பாரிப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து, மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் அவரது மகன் கிருஷ்ணசாமியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முதியவரின் மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
