LATEST NEWS
“இத விட வேற என்ன வேணும்..? வெள்ளத்தில் தவித்த குழந்தைகளையும்… முதியவர்களையும் கைகளில் ஏந்தி மீட்கும் ராணுவம்..! உங்கள் பாசத்துக்கு ஒரு சலூட்..!!”
அசாம் மாநிலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய ராணுவம் ‘ஆப்பரேஷன் ஜல் ராஹத்’ என்ற பெயரில் மனிதநேய மீட்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. எல்லைகளைப் பாதுகாப்பது மட்டுமின்றி, பேரிடர் காலங்களிலும் நாட்டு மக்களைக் காப்பதில் ராணுவம் எப்போதும் முன்னிற்கும் என்பதை இச்செயல் மீண்டும் நிரூபித்துள்ளது. உள்ளூர் நிர்வாகம், தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து இந்திய ராணுவத்தினர் தோளோடு தோள் நின்று நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பணியில் ராணுவம் டிரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மிகவும் தொலைதூர மற்றும் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கிறது. இதுவரை ‘ஆப்பரேஷன் ஜல் ராஹத்’ மூலம் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 200-க்கும் அதிகமானோருக்கு மருத்துவ உதவி, 19 டன் தானியங்கள், 30,500-க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள், 43,000 லிட்டருக்கும் அதிகமான குடிநீர், காய்கறிகள், பால், உடைகள் மற்றும் சுகாதாரக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் சிக்கிய சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்திய ராணுவ வீரர்கள் தங்களது கைகளில் தூக்கிச் சென்று பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த மனிதநேயமிக்க செயலையும் தியாகத்தையும் கண்டு நாடு முழுவதிலும் உள்ள இணையவாசிகள் இந்திய ராணுவத்திற்குத் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்து பெருமிதம் அடைந்து வருகின்றனர்.
