LATEST NEWS
பகீர்..! பெங்களூருவில் பைக்கை நசுக்கிய தண்ணீர் டேங்கர் லாரி… மரணத்தின் விளிம்பில் இருந்து நூலிழையில் குதித்து உயிர் தப்பிய வோல்மார்ட் ஊழியர்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!
பெங்களூருவின் குஞ்சூர்-பால்யா சிடிபி சாலையில், தார் பூசப்படாத மற்றும் மழைநீர் தேங்கிய கரடுமுரடான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சௌரப் அகர்வால் என்ற வோல்மார்ட் ஊழியர், தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் லாரியின் சக்கரங்களுக்கு அடியில் தனது மோட்டார் சைக்கிள் நசுங்குவதற்குச் சில நொடிகள் முன்பாகவே அதிலிருந்து குதித்துத் உயிர் தப்பியுள்ளார். மழைநீரால் மூடப்பட்டிருந்த பெரிய பள்ளங்களைக் கடக்க அவர் முயன்றபோது, அருகே வந்த தண்ணீர் டேங்கர் லாரி நிலைதடுமாறி அவர் மீது மோதுவது போல வந்தது. இதைக் கண்ட அவர் உடனடியாக வண்டியிலிருந்து விலகி குதித்ததால், மோட்டார் சைக்கிள் மட்டும் லாரியின் சக்கரங்களில் சிக்கிச் சேதமடைந்தது. இக்கோரச் சம்பவத்தின் வீடியோவை பின்னால் வந்த பயணி ஒருவர் படம்பிடித்துள்ளார்.
இச்சம்பவம் நடந்த பிறகு, பாதிக்கப்பட்ட வாகன ஓட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து தண்ணீர் டேங்கர் லாரியின் ஓட்டுநரைக் கைது செய்தனர். மேலும், அந்த தண்ணீர் டேங்கர் லாரியில் பதிவு எண் எதுவும் இல்லை என்றும், ஓட்டுநர் முறையான ஓட்டுநர் உரிமம் இன்றி, வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்ளும் நிலையில் இருந்தவர் என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். ஆபத்தான சாலையில் கனரக வாகனங்களை முறையாகக் கண்காணிக்காதது குறித்துப் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்த அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, பெங்களூருவின் மோசமான சாலைகள் குறித்தும், போக்குவரத்துச் சட்டங்களைச் சரியாக நடைமுறைப்படுத்தாதது குறித்தும் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் பெரும் கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். “பெங்களூருவில் உள்ள குழி விழுந்த சாலைகள் மற்றும் ஊழல் அதிகாரிகளால்தான் பயணிகள் இதுபோன்ற ஆபத்துகளை எதிர்கொள்கிறார்கள்” என்றும், “கனரக வாகன ஓட்டுநர்கள் இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்வதில்லை” என்றும் பலரும் தங்களது கோபத்தையும் ஆதங்கத்தையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
