LATEST NEWS
“ப்ளீஸ் அப்படிச் சொல்லாதீங்க… எங்களைச் சீனர்கள்னு கூப்பிட்டா ரொம்ப வலிக்குது..!” கைகூப்பி அழுத அருணாச்சலச் சிறுமி… இணையத்தைக் கலங்க வைக்கும் வைரல் வீடியோ..!!
சொந்த நாட்டிலேயே நம்மை அந்நியர் போல நடத்தினால் எப்படி இருக்கும்? அருணாச்சலப் பிரதேசத்தின் ஈட்டாநகரைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு அப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டபோது, அது அவளுக்கு மிகுந்த வேதனையளித்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், அந்தச் சிறுமி கைகளைக் கூப்பி, தனக்கு நேர்ந்த சம்பவத்தைக் கூறி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளது அனைவரது நெஞ்சையும் உருக்குவதோடு, நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் யோசிக்க வைத்துள்ளது.
வைரலாகும் அந்த வீடியோவில் அச்சிறுமி, “ஹலோ ஃபிரண்ட்ஸ், ஒருவர் என்னைப் பார்த்து ‘நீங்கள் சீனாவைச் சேர்ந்தவரா?’ என்று கேட்டார். ஆனால் நாங்கள் இந்தியர்கள், தயவுசெய்து எங்களை அப்படிச் சொல்லாதீர்கள். எங்களைச் சீனர்கள் என்று கூப்பிடும்போது எங்களுக்கு மிகவும் கோபமும் மிகுந்த மனவேதனையும் ஏற்படுகிறது. நாங்கள் ஈட்டாநகரில் வசிக்கிறோம்; தயவுசெய்து எங்களைச் சீனர்கள் என்று சொல்லாமல் இந்தியர்கள் என்று சொல்லுங்கள்” எனத் தன் மழலை மொழியில் கைகூப்பி அழுதபடியே முறையிடுகிறாள்.
வடகிழக்கு இந்திய மக்கள் பெரும்பாலும் தங்களுடைய முக அமைப்பின் காரணமாகத் தங்கள் சொந்த நாட்டிலேயே இனரீதியான கேலிகளுக்கும் பாகுபாடுகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். ஆனால், இந்தச் சிறுமியின் வீடியோ வெளியானதும் சமூக வலைதளங்களில் ஏராளமானோர் அச்சிறுமிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். “அப்படிப் பேசியவனைப் பற்றிக் கவலைப்படாதே செல்லமே, நீ இந்தியாவின் பெருமை” என்றும், “அறியாமையினால் அப்படிப் பேசியவர்களின் பேச்சை மனதில் எடுத்துக்கொள்ளாதே” என்றும் நெட்டிசன்கள் அச்சிறுமிக்கு அன்பையும் ஆதரவையும் பொழிந்து வருகின்றனர்.
