LATEST NEWS
“நம்பலனா கூகுள்ல பாருங்க..!” மின்துறை ஊழல் விவாதத்தில் அனல் பறந்த நிர்மல் குமார் Vs செந்தில் பாலாஜி பயங்கர மோதல்.. சட்டசபையில் உச்சகட்ட பரபரப்பு..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின்சாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, மின்துறை அமைச்சர் ஆர். நிர்மல் குமார் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நிலவிய முறைகேடுகளைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் நிர்மல் குமார், சந்தை விலையில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள மின்மாற்றிகளை சுமார் ரூ.12.50 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை கூடுதல் விலைக்கு டெண்டர் விட்டு வாங்கியது ஏன் என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். “கூகுளில் தேடிப் பார்த்தாலே இதன் உண்மை விலை தெரியும்; நீங்கள் வெளியிட்ட வெள்ளை அறிக்கையையும், நீதிமன்றக் கேள்விகளையும் திரும்பிப் பாருங்கள்” என்று கூறி, முந்தைய ஆட்சியில் மின்வாரியத்தில் நடந்த முறைகேடுகளே தற்போதைய நிதி நெருக்கடிக்குக் காரணம் என அமைச்சர் கடுமையாகச் சாடினார்.
அமைச்சரின் இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்த முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் மின்சார விநியோகக் கட்டமைப்பு சீராகப் பராமரிக்கப்பட்டது என்றும், மக்களின் மின் தேவையை நிறைவு செய்யவே 90,000-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டன என்றும் விளக்கமளித்தார். 1987-ஆம் ஆண்டு முதல் மின்வாரியம் பின்பற்றி வரும் அதே வெளிப்படையான டெண்டர் நடைமுறைகள்தான் தங்களது ஆட்சியிலும் முறையோடு பின்பற்றப்பட்டன என்றும், எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்தார். தற்போதைய அரசு பழைய குறைபாடுகளைப் பேசிக் கொண்டிருக்காமல், மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
