LATEST NEWS
ட்ரம்புக்கு பதில் விஜய்யே அமெரிக்க அதிபராகலாம்… ஆனா இங்க ரீல் விடுற மாதிரி அங்க முடியாது…!’ கோவை விமான நிலையத்தில் இ.பி.எஸ். அதிரடி பேட்டி..!!
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், அனல்மின் நிலையத் திட்டத்தை அறிவித்துதானே உள்ளனர், உடனே செயல்பாட்டிற்கு வராது எனத் தெரிவித்தார். தவெக ஆட்சிக்கு வந்த இரு அறிவிப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒன்று திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிருக்கு இலவசப் பேருந்து திட்டம் என்றும் கூறினார். மேலும், திட்டமில்லாத செயல்பாடுதான் தவெக ஆட்சி என்றும், கட்சி நிதி உண்மையா பொய்யா என்பதை தவெகவிடம்தான் கேட்கவேண்டும் என்றும், எதையாவது சொல்லி காலத்தை ஓட்டவேண்டும் என விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஊழல் என்றால் ஆதாரத்தைக் காட்டி நிரூபிக்க வேண்டும் என்றும், தவெக ஆட்சி அமைந்தபின்தான் ஊழல் அதிகரித்துள்ளது என மக்கள் பேசுவதாகவும் கூறினார். லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல இடங்களில் சோதனை நடத்தி பணத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில் ஊழல் நடந்துகொண்டுதானே இருக்கிறது என்றும், இதனை எப்படி தூய்மையான ஆட்சி எனக் கூற முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். இந்த ஆட்சியில் எங்காவது சோதனை நடந்தால் உடனே ரீல்ஸ் போடுவதாகவும், ஊடகங்கள் அதற்கு மெருகூட்டுவதாகவும் குறிப்பிட்ட அவர், ரீல்ஸ் போட்டே வண்டியை ஓட்டுவதாகவும் ரியல் எதுவுமில்லை என்றும் சாடினார்.
மேலும், அமெரிக்க நாட்டிற்கு கூட அவர் ஜனாதிபதி ஆகலாம், அதில் தவறில்லை என்றும், ட்ரம்புக்கு பதில் அவரே அமெரிக்காவின் ஜனாதிபதி ஆகலாம், அது அவருடைய விருப்பம் என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ரீல் விடலாம், அமெரிக்காவில் அது முடியாது எனக் குறிப்பிட்ட அவர், தாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் தொடர்வதாகக் கூறினார். தவெக ஆட்சி செல்லும் போக்கைப் பார்த்தாலே ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என்பது தெரிவதாகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காமல் கடன் மட்டுமே வாங்குவதாகவும் குற்றம்சாட்டினார்.
