LATEST NEWS
“உன் கமிஷனரைக் கூப்பிடு..! நான் இங்கதான் உட்கார்ந்திருப்பேன்… காரை மோதிவிட்டு ரோட்டில் நின்று கெத்து காட்டிய புனே வாலிபர்… போதை தெளிஞ்சதும் லேட்டஸ்ட்டா விட்ட மன்னிப்பு வீடியோ..!!”
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள வாகாட்-ஹிஞ்சவடி BRT சாலையில், மதுபோதையில் காரை ஓட்டி வந்த நபர் ஒருவர் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பிம்பிரி-சின்ச்வாட் காவல் துறையினருடன் அந்த நபர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களை அநாகரிகமாகப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசாங்க் பிரசாந்த் கான்வால்கர் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், காவல்துறையினரைக் கண்டதும் அவர்களை நோக்கி பாய்ந்து சென்று ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், “உன் கமிஷனரைக் கூப்பிடு! நான் இங்கேயே தான் உட்கார்ந்திருக்கிறேன்” என்று காவலர்களுக்குச் சவால் விடுத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சம்பவம் முழுவதையும் அங்கிருந்த பொதுமக்கள் மொபைல் போனில் படம்பிடிக்க, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவியது.
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, வாகாட் காவல் துறையினர் சசாங்க் கான்வால்கர் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பினர். காவல்துறை நடவடிக்கை எடுத்ததையடுத்து, போதை தெளிந்த அந்த நபர் தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், காவல்துறையினர் தமக்கு உதவவே வந்ததாகவும், போதையில் தெரியாமல் அப்படி நடந்து கொண்டதாகவும் கூறிப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
