LATEST NEWS
“தோட்டத்தில் புலி உலாவுது… நான் வேலைக்கு போக மாட்டேன்..!” AI தொழில்நுட்பத்தை வம்ப விலைக்கு வாங்கி… கடைசியில் 50 தோப்புக்கரணம் போட்ட வாலிபர்.. கர்நாடகாவில் நடந்த விசித்திர சம்பவம்..!!
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள காவலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஈரண்ணா. இவருக்குச் சொந்தமாக வனப்பகுதியை ஒட்டி தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்துக்கு வேலைக்குச் செல்லுமாறு ஈரண்ணாவின் குடும்பத்தினர் அவரை வற்புறுத்தி வந்தனர். இதைத் தவிர்க்க, தனது தோட்டத்தில் புலி உலா வருவது போல் ஈரண்ணா ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் வீடியோ ஒன்றை உருவாக்கி சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோவை தனது குடும்பத்தினரிடம் காட்டி, தோட்டத்தில் புலி உலவுவதால் தான் வேலைக்குச் செல்ல மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியதால், அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினரும் கிராம மக்களும் தோட்டத்தில் புலி நடமாட்டம் இருப்பதாக நம்பினர். இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஈரண்ணாவின் தோட்டத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், அங்கு புலியின் கால்தடங்கள் ஏதும் கிடைக்காததால் சந்தேகமடைந்த வனத்துறையினர் ஈரண்ணாவை அழைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தான் வேலைக்குச் செல்வதைத் தவிர்க்கவே ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியாக வீடியோ உருவாக்கிப் பதிவிட்டதாக ஈரண்ணா ஒப்புக்கொண்டார். இதனால் கடும் கோபமடைந்த வனத்துறையினர், போலி வீடியோவைப் பரப்பியதற்கும் வனத்துறையின் நேரத்தை வீணடித்ததற்கும் அவருக்கு நூதன தண்டனை விதித்தனர். அதாவது, ஈரண்ணாவை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று கிராம மக்கள் முன்னிலையில் 50 தோப்புக்கரணம் போட வைத்தனர். மேலும் இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஈரண்ணா தோப்புக்கரணம் போடும் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
