LATEST NEWS
“கோவில் வாசலில் நேர்ந்த பெருந்துயரம்” கரைபுரண்ட ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்ட கார்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 8 பேர் நீரில் மூழ்கி பலி..!!
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கோவிலுக்கு ஆன்மீகப் பயணம் சென்ற பக்தர்கள் சென்ற கார் ஒன்று, கரைபுரண்டு ஓடிய ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்ட பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மற்றும் டாக்ஸி ஓட்டுநர் என மொத்தம் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பக்தர்கள், உஜ்ஜைன் நகருக்குச் சென்று வழிபாட்டை முடித்துவிட்டு, அங்கிருந்து டாக்ஸி மூலம் அகார் மால்வா மாவட்டத்தில் உள்ள நால்கேதாவில் உள்ள மா பாக்லாமுகி கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இவ்விபத்தில் காரில் பயணித்த 2 பெண்கள், 2 ஆண்கள், 3 குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கிப் பலியாகினர். விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர், ஓடையில் மூழ்கிக்க கிடந்த காரை மீட்டெடுத்து, அதனுள் இருந்த 8 பேரின் சடலங்களையும் வெளியே எடுத்தனர். தற்போது பலியானவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் உள்ளூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 37 மி.மீ அளவுக்குப் பெய்த மழையால், கோவிலின் முன்புறம் உள்ள ஓடையில் திடீரென நீர்மட்டம் ஆபத்தான அளவிற்கு உயர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடியதே இந்த விபத்திற்குக் காரணம் என மாவட்ட ஆட்சியர் சேர் சிங் மீனா தெரிவித்துள்ளார். இந்த விபத்தைத் தொடர்ந்து, ஆபத்தான அந்த ஓடையைக் கடக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் மற்றும் உரிய பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
