LATEST NEWS
“மனிதர்கள் ஏமாத்துறாங்க… நாங்க மாட்டிக்கிறோம்…” வைரல் மனுவில் ஒலித்த தெருநாய்களின் வேதனை..! ம.பி. நகராட்சியை உலுக்கிய நூதனப் போராட்டம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நாய் முகமூடி அணிந்து நபர் ஒருவர் மனு அளிக்கச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மாநகராட்சிப் பகுதியில் தெருநாய்களுக்குக் கருத்தடை செய்வதில் பல்வேறு குறைபாடுகளும் ஊழலும் இருப்பதாகக் கூறி அவர் இந்த நூதனப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் தீபக் முல்லு ரத்தோருடன் சென்று மனு அளித்த அந்த நபர், அதிகாரிகளைச் சாடும் வகையில் தனது கோரிக்கைகளை முன்வைத்தார்.
அப்போது பேசிய அவர், “மனிதர்கள் ஏமாற்றுகிறார்கள்… நாங்கள் மாட்டிக் கொள்கிறோம். மக்கள் நாங்கள் அவர்களைக் கடிப்பதாக நினைக்கிறார்கள், ஆனால் அதில் எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. முன்பு எங்களுக்குச் சாப்பிட ஏதாவது கிடைக்கும், ஆனால் இப்போது அது நடப்பதில்லை. அதனால் நாங்கள் நிச்சயமாக மக்களைத் துரத்திச் செல்வோம். மாவட்ட ஆட்சியரிடம் இருந்து நாங்கள் நீதியைக் கோருகிறோம். எங்கள் பெயரில் நிதியைத் திருடி, எங்களுக்கு அவதூறு பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்களுக்கு முறையான அறுவை சிகிச்சை செய்யாமல், அதிகாரிகள் போலியான ரசீதுகளை மட்டும் தயாரித்து ஊழல் செய்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
காண்ட்வா மாநகராட்சிப் பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், அவற்றுக்குக் கருத்தடை சிகிச்சை செய்யவும் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ. 40 லட்சம் வரை செலவிடப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது. ஆனால், அதே காலகட்டத்தில் 13,225 நாய்க்கடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மறுபுறம் இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை மாநகராட்சி நிர்வாகப் பொறியாளர் சஞ்சய் சுக்லா மறுத்துள்ளதோடு, கருத்தடைத் திட்டம் தொடர்பான பதிவுகளும் தரவுகளும் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். மேலும், இவ்விவகாரம் நகராட்சி ஆணையருடன் விவாதிக்கப்பட்டதாகவும், விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
