LATEST NEWS
அடக்கொடுமையே…! தந்தையின் இறப்புச் சான்றிதழில் மகனின் பெயர்… சிவபுரியில் அரசு அதிகாரிகளின் பகீர் குளறுபடி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கிட்லா ஆதிவாசி என்பவருக்கு, நகராட்சி அதிகாரிகளின் பெரும் அலட்சியத்தால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இவரது தந்தை ஜக்னி ஆதிவாசி காலமானார். அதைத் தொடர்ந்து தந்தையின் இறப்புச் சான்றிதழ் கோரி கிட்லா விண்ணப்பித்திருந்தார். ஆனால், நகராட்சி நிர்வாகம் தவறாக இறந்த தந்தையின் பெயருக்குப் பதிலாக, உயிரோடு இருக்கும் மகனான கிட்லாவின் பெயரிலேயே இறப்புச் சான்றிதழைப் பதிவு செய்து வழங்கிவிட்டது.
எழுதப் படிக்கத் தெரியாத கிட்லாவுக்கு இந்தத் தவறு ஆரம்பத்தில் தெரியவில்லை. பின்னர், தந்தையின் விவசாய நிலத்தை தன் பெயருக்கு மாற்ற அதிகாரியிடம் சென்றபோதுதான், அரசுப் பதிவேடுகளின்படி தான் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். இந்த தவறான சான்றிதழ் காரணமாக அவரது ஆதார் அட்டையும் முடக்கப்பட்டது. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக அவருக்குக் கிடைக்க வேண்டிய இலவச ரேஷன், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, கிசான் சம்மான் நிதி மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளும் முற்றிலும் நின்றுபோயின.
இந்தத் தவறைச் சரி செய்யக் கோரி கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக நகராட்சி அலுவலகத்திற்கு அலைந்தும், முதலமைச்சரின் உதவி மையத்தில் புகார் அளித்தும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. எனவே, தன் பெயரில் தவறாக வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழை உடனடியாக ரத்து செய்து, அரசுப் பதிவேடுகளில் தன்னை மீண்டும் ‘உயிருடன் இருப்பவராக’ மாற்ற வேண்டும், தனது ஆதார் அட்டையை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் மற்றும் தந்தைக்குச் சரியான இறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
