LATEST NEWS
என்னது… மில்க் டீயில தவளையா..?! பார்த்ததும் அருவருத்த வீடியோ… உற்றுப் பார்த்ததும் அம்பலமான ரகசியம்..!!
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் சீனாவைச் சேர்ந்த ஒருவர் மில்க் டீயில் உயிருடன் இருக்கும் தவளையைப் போட்டு அதைக் குடிப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. X தளத்தில் @lolong___ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ, 1.2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலானதோடு, சீன மக்கள் இதுபோன்ற அருவருப்பான பானங்களைக் குடிப்பதாகக் கூறி பயனர்களிடையே கடுமையான எதிர்ப்பையும் விமர்சனங்களையும் கிளப்பியது.
ஆனால், இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்தபோது இது முற்றிலும் பொய்யானது என்பது தெரியவந்துள்ளது. ஆசிய நாடுகளில் சில இடங்களில் சமைக்கப்பட்ட தவளைகளை உணவுக்காகப் பயன்படுத்துவது வழக்கம் என்றாலும், உயிருள்ள விலங்கையோ அல்லது தவளையையோ தேநீரில் போட்டு அதன் சாற்றைக் குடிப்பது சீனா உட்பட எந்தவொரு நாட்டின் உணவுப் பழக்கவழக்கத்திலும் கிடையாது. வீடியோவை உற்றுநோக்கினால், அந்த நபர் ஸ்ட்ரா மூலம் குடிப்பது போல வெறும் நடிப்பு மட்டுமே செய்கிறார் என்பதும், பானம் எதுவும் அவர் வாய்க்குச் செல்லவில்லை என்பதும் தெளிவாகிறது.
சமூக வலைத்தளங்களில் அதிக லைக்குகள், வியூஸ்கள் மற்றும் கவனத்தைப் பெறுவதற்காகவே இதுபோன்று திட்டமிட்டு போலி வீடியோக்கள் உருவாக்கப்படுகின்றன. மக்களின் கோபத்தையும் அதிர்ச்சியையும் தூண்டும் வகையில் கருத்துகளைப் பெற வேண்டும் என்பதற்காகவே குறிப்பிட்ட ஒரு நாட்டின் கலாச்சாரத்துடன் இணைத்து இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. எனவே, இணையத்தில் வெளியாகும் இதுபோன்ற அதிர்ச்சியூட்டும் வீடியோக்களை உண்மை என உடனடியாக நம்பாமல் கவனமாக இருக்க வேண்டும்.
