LATEST NEWS
சும்மா வாய்க்கு வந்தது அடிச்சிவிடாதீங்க… 2 கட்சிக்கு டோக்கன் போட்டுட்டு 3-ஆவது கட்சிக்கு போயி அமைச்சர் ஆனவர் தானே நீங்க..? யாதவ் அர்ஜுனாவை கிழித்தெடுத்த நயினார் நாகேந்திரன்..!!
சென்னை சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்தின் போது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துக்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் அறிக்கை மூலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “அடிச்சி விடுவோம், நமக்கென்ன” என்று தாக்கல் செய்யப்படாத தொகுதி மறுவரையறை மசோதா பற்றிப் பொய்யான கருத்துகளைப் பரப்புவது ஆரோக்கியமான அரசியல் அல்ல என்று குறிப்பிட்ட அவர், இரண்டு கட்சிகளில் இருந்து மூன்றாவதாக தவெக-வில் இணைந்து அமைச்சரானவர், மூத்த சட்டமன்ற உறுப்பினரான போஜராஜனைப் பார்த்து “உங்கள் குரல் தமிழகத்திற்கு கேட்காது” என்று பேசியது ஆணவத்தின் வெளிப்பாடு எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், தொகுதி மறுவரையறை குறித்து அமைச்சர் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் பொய்யானவை எனச் சுட்டிக்காட்டிய நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்த அனைத்து மாநிலங்களிலும் 50% தொகுதிகளை உயர்த்தும் சூத்திரத்தின் அடிப்படையில், தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-லிருந்து 59-ஆக உயரும் என்றும், இதன் மூலம் விகிதாச்சார அடிப்படையில் பாராளுமன்றத்தில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 7.18%-லிருந்து 7.23%-ஆக அதிகரிக்கும் என்றும் விளக்கமளித்துள்ளார். வடமாநிலங்களுக்குச் சாதகமாகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் 2011 மக்கள் தொகை அடிப்படையில் உத்தரப் பிரதேசத்திற்கு 140 தொகுதிகள் கிடைக்குமாறு செய்திருக்கலாம் என்றும், ஆனால் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்கும் நோக்கில் தமிழகத்திற்கு 20 கூடுதல் எம்பி தொகுதிகள் கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அமெரிக்காவை உவமையாகப் பேசிய அமைச்சருக்கு பதிலளித்த அவர், அமெரிக்காவில் வாக்குச்சீட்டு முறை தான் உள்ளது என்பதால் இந்தியாவையும் பல பத்தாண்டுகள் பின்னோக்கி இழுக்கப் பார்க்கிறீர்களா என்றும், EVM மூலம் வெற்றி பெற்று அரியணையில் அமர்ந்துவிட்டு அதையே எதிர்ப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டமன்றத்தில் அமெரிக்கா, அயர்லாந்து, அண்டார்டிகா எனப் பேசுவதால் மட்டுமே அதிமேதாவி ஆகிவிட முடியாது என்றும், அரசியல் புரிதலும் அவை நாகரிகமும் இல்லாததால் தான் சொந்தக் கட்சி சபாநாயகரே அமைச்சரின் பேச்சுக்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்குகிறார் என்றும் சாடினார். பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டவுடன் அமைச்சரின் பொய்கள் தூள் தூளாகும் எனக் கூறிய அவர், தங்களின் கூற்று உண்மை என நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டு வெளியேறும் திராணி அமைச்சருக்கு இருக்கிறதா எனப் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
