LATEST NEWS
“உடலளவில் சோர்வாக இருந்தாலும்” இரவெல்லாம் மருத்துவச் சிகிச்சை… காலையில் போராட்டக் களம்… மருத்துவமனையிலிருந்து நேராகக் களத்திற்கு வந்த CJP தலைவர்..!!
காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனரான அபிஜீத் தீப்கே, கடுமையான காய்ச்சல் காரணமாக இரவெல்லாம் மருத்துவமனையில் நரம்புப் பாதை ஊசிகள் (IV), இரத்தப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் பெற்ற பிறகு, மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டக் களத்திற்குத் திரும்புவதாக அறிவித்துள்ளார். உடலளவில் இன்னும் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்ந்தாலும், “போராட்டம் தொடர வேண்டும்” என்று ‘எக்ஸ்’ தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் தொடரும் என்பதை அவர் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.
நீட்-யுஜி வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, சி.ஜே.பி கட்சி சார்பில் நாடு தழுவிய அளவில் அமைதியான போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சரின் ராஜினாமாவை முதன்மை கோரிக்கையாக வைத்து இந்த இயக்கம் தீவிரமடைந்துள்ளது.
இதனிடையே, ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள 1.5 கி.மீ சுற்றளவில் இணைய சேவைகளை அரசு முடக்கியதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. மற்றொருபுறம், போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கேற்ப நடுநிலையான இடமான ‘கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்’ மத்திய அரசுக்கும் சி.ஜே.பி அமைப்பினருக்கும் இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
