LATEST NEWS
“மாட்டு சிறுநீர் குடிக்க சொல்லுறாங்க” சென்னை ஐஐடி இயக்குநரின் பேச்சா இது..? CPI MLA ராமச்சந்திரன் கடும் கண்டனம்..!!
மாட்டு சிறுநீரில் மருத்துவ குணம் இருப்பதாகக் கூறி, அதனைத் தினமும் அருந்துமாறு சென்னை ஐஐடி இயக்குநர் தெரிவித்த கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தங்களது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ஒரு புகழ்பெற்ற உயர் கல்வி நிறுவனத்தின் பொறுப்பில் உள்ளவர், இது போன்ற ஆதாரமற்ற கருத்துகளைப் பொதுவெளியில் பேசுவது அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இத்தகைய பிற்போக்கான மற்றும் அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளைப் பாடத்திட்டங்களில் கொண்டு வர மத்திய அரசு தொடர்ச்சியாக முயற்சி செய்து வருவதாக எம்.எல்.ஏ ராமச்சந்திரன் குற்றம்சாட்டினார். நவீன தொழில்நுட்பங்களையும், அறிவியல் கண்டுபிடிப்புகளையும் உலகிற்கு வழங்க வேண்டிய உயரிய கல்வி நிறுவனங்களில் இது போன்ற மூடநம்பிக்கைகளைப் புகுத்தும் முயற்சிகள் கண்டிக்கத்தக்கவை என்றும் அவர் சாடினார்.
உயர் கல்வி நிறுவனங்களின் முக்கிய நோக்கமே மாணவர்களிடையே அறிவியல் பூர்வமான சிந்தனைகளை வளர்ப்பதாகத்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அதற்கு மாறாக மூடநம்பிக்கைகளைத் திணிக்கும் இத்தகைய முயற்சிகளை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் தனது பேச்சில் கேட்டுக்கொண்டார்.
