LATEST NEWS
சற்றுமுன் அதிர்ச்சி..! வேலை வாங்கித் தருவதாக ரூ.23 லட்சம் மோசடி.. முன்னாள் திமுக அமைச்சர் சிவசங்கர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு…!!
போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 23 லட்சம் மோசடி செய்ததாக, திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் சீனிவாசன் புகார் அளித்துள்ளார். இந்த மோசடி புகாரில் சிவசங்கரின் உதவியாளர் என்று கூறிக்கொண்ட இளஞ்செழியன் என்பவர் ஏற்கனவே கடந்த ஜூன் 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. தனது மகனுக்கு மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி, 2023 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் இந்த பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக சீனிவாசன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சீனிவாசன் அளித்த புகாரில், இளஞ்செழியன் மூலமாக கொடுக்கப்பட்ட பணம் தன்னிடம் வந்து சேர்ந்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் தன்னிடம் உறுதிப்படுத்தியதாகவும், வேலை நிச்சயம் கிடைத்துவிடும் எனப் பயப்பட வேண்டாம் என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ள முன்னாள் அமைச்சர் சிவசங்கர், கைது செய்யப்பட்ட இளஞ்செழியன் யார் என்றே தனக்குத் தெரியாது என்றும், தனக்கு அந்த பெயரில் எந்தவொரு உதவியாளரும் இல்லை என்றும் சமூக வலைதளங்களில் விளக்கம் அளித்துள்ளார். இந்த வேலைவாய்ப்பு மோசடி விவகாரத்தில் இன்னும் பல ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
