LATEST NEWS
திக் திக்… மழையே இல்லாமல் நேபாளத்தை விழுங்கிய திடீர் பெருவெள்ளம்…. எல்லை கடந்து இந்தியாவையும் அச்சுறுத்தும் அடுத்தகட்ட பேரழிவு..! உறைபனி மலையில் என்ன நடக்கிறது..? பதறவைக்கும் பின்னணி..!!
இந்தியாவின் எல்லைக்கு அருகே அமைந்த நேபாளத்தில், திபெத் எல்லையோர ரசுவா மாவட்டத்தில் பாயும் ‘போதே கோஷி’ நதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு 160 பேரைக் பலிவாங்கியுள்ளதுடன், 400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதில் கைலாஷ் மானசரோவர் புனித பயணம் மேற்கொண்ட இந்திய பக்தர்கள் 133 பேரும் அடங்குவர். சேறு மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் ஏராளமானோர் சிக்கியுள்ள நிலையில், ரசுவா, தாடிங், நுவாகோட் ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. நேபாள ராணுவமும் காவல்துறையும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவைத் தொடர்பு கொண்டு நிலைமையைக் கேட்டறிந்ததுடன், முதற்கட்டமாக 10 டன் எடையுள்ள அத்தியாவசிய மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களை நேபாளத்திற்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
பொதுவாகக் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலையில், இந்த பேரழிவு முற்றிலும் கணித்துக் கூற முடியாத முறையில் நடந்துள்ளது. தொடக்கத்தில் திபெத் பகுதியில் ஏற்பட்ட 4.4 ரிக்டர் நிலநடுக்கத்தால் பனிப்பாறை சரிந்தது எனச் சொல்லப்பட்டாலும், ‘ICIMOD’ ஆய்வாளர்களின் முதற்கட்ட ஆய்வில் இமயமலையின் அதி உயர பகுதியில் ஏற்பட்ட பனி மற்றும் பாறைச் சரிவே காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சரிவு திபெத் – சீனா எல்லையில் உற்பத்தியாகும் லெண்டே கோலா நதியின் நீரோட்டத்தை அடைத்தது. இதனால் இயற்கை அணை போலத் தேங்கியிருந்த பெருமளவு நீர் திடீரென உடைந்ததால், அந்த நதி நேபாள எல்லைக்குள் ‘போதே கோஷி’ நதியாகப் பாயும்போது ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத திடீர் பெருவெள்ளமாக உருவெடுத்தது.
சீனா – நேபாள எல்லையில் உள்ள லெண்டே கோலா நதியில் இன்னும் பாறை அடைப்புகள் இருப்பதால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் இந்தியாவின் பீகார் மற்றும் உத்தரப் பிரதேச எல்லை மாநிலங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் மட்டுமின்றி, புவி வெப்பமயமாதல் காரணமாக இமயமலையில் உறைந்துள்ள ‘பெர்மாஃப்ராஸ்ட்’ எனப்படும் பனி-மண் அடுக்குகள் வேகமாக உருகுவதும் பாறைச் சரிவுகளுக்கு முக்கியக் காரணமாகும். நேபாளத்தில் பாயும் போதே கோஷி, திரிசூலி போன்ற நதிகள் இந்தியாவின் கங்கை நதி அமைப்பிலேயே இணைவதால், இமயமலையில் ஏற்படும் இத்தகைய தீவிர மாற்றங்கள் பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கத்தையும் பாதிக்கும். எனவே இதனைச் சமாளிக்க இந்தியா, நேபாளம் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
