LATEST NEWS
“நான் அதிகாரி ஆயிட்டேன்… உன்னை கல்யாணம் பண்ண முடியாது..” கடுப்பாகி பழிவாங்கிய காதலனின் ஒற்றை மின்னஞ்சல்… அம்பலமான மாபெரும் MPSC தேர்வு ஊழல்..!!
மகாராஷ்டிர மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கான மருந்து ஆய்வாளர் தேர்வில் நடந்த வினாத்தாள் கசிவு வழக்கு, ஒரு த்ரில்லர் திரைப்படத்தின் கதையைப் போல வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2026 மார்ச் 22 அன்று நடைபெற்ற இத்தேர்வில், மாலேகானில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வந்த கௌரவ் என்ற இளைஞர், தனது காதலி ரிதுஜாவை அரசு அதிகாரியாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே கசிந்த வினாத்தாளை அவரிடம் கொடுத்து உதவியுள்ளார். கௌரவின் சொந்த சகோதரரும் இத்தேர்வை எழுதியபோதிலும், அவர் தனது சகோதரரைப் புறக்கணித்துவிட்டு காதலிக்கு மட்டுமே வினாத்தாளை வழங்கினார். இதைப் பயன்படுத்தி ரிதுஜா இத்தேர்வில் மாநில அளவில் 7-வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றார்.
ஆனால், தேர்வு முடிவுகள் வெளியாகி ரிதுஜா அதிகாரி ஆனவுடன் உண்மையான பிரச்சனை தொடங்கியது. அதிகாரி அந்தஸ்து கிடைத்ததும் ரிதுஜா, கௌரவை திருமணம் செய்து கொள்ள முடியாது எனக்கூறி நிராகரித்து பிரேக்ப் செய்துள்ளார். காதலியின் இந்தத் துரோகத்தாலும் ஏமாற்றத்தாலும் ஆத்திரமடைந்த கௌரவ், பழிவாங்கும் நோக்கில் MPSC தேர்வாணையத்திற்கு ஒரு ரகசிய மின்னஞ்சல் அனுப்பி, வினாத்தாள் கசிந்த முழு விபரத்தையும் அம்பலப்படுத்தினார். பின்னர் சட்ட நடவடிக்கைகளுக்கும் சிறை தண்டனைக்கும் பயந்து, அது நண்பர்களுடன் செய்த விளையாட்டு என மற்றொரு மின்னஞ்சல் அனுப்பி சமாளிக்க முயன்றபோதிலும், அதற்குள் விசாரணை தீவிரமடைந்தது.
கௌரவின் மின்னஞ்சலை அடிப்படையாகக் கொண்டு மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கியபோது, அரசு அதிகாரிகளே சம்பந்தப்பட்ட மிகப்பெரிய ஊழல் நெட்வொர்க் வெளிப்பட்டது. MPSC ஒருங்கிணைப்பு அதிகாரி விஷ்வேஷ்வர் நகாதே, தேர்வாணைய அலுவலகத்தின் பார்க்கிங் பகுதியில் வைத்து வினாத்தாளை துணைச் செயலாளர் அபிஜித் லெண்ட்வேயிடம் ஒப்படைக்க, அது கோபால் மராத்தே மற்றும் அகாடமி இயக்குநர் பிரவீன் பாட்டீல் வழியாக ரிதுஜாவின் தந்தை அம்ருத் பாட்டீலை அடைந்து, இறுதியில் கௌரவ் மூலம் ரிதுஜாவிற்குச் சென்றது தெரியவந்தது. இச்சம்பவத்தில் MPSC அதிகாரிகள் 3 பேர், பயிற்சி மைய இயக்குநர், ரிதுஜாவின் தந்தை மற்றும் பழிவாங்கிய காதலன் கௌரவ் உட்பட 6 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
