LATEST NEWS
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்..! ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் திடீர் இடமாற்றம்… பின்னணியில் இருக்கும் சீக்ரெட்… செப்டம்பர் 30-க்கு பின் நடக்கப்போகும் மாஸ் சம்பவம்..!!
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்கள் நீண்டகாலமாகக் காலியாகவே இருந்து வருகின்றன. இந்த அதிகாரமிக்கப் பதவிகளைக் கைப்பற்றுவதற்காக, ஓய்வுபெற்ற மற்றும் ஓய்வுபெறும் தறுவாயில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திரைமறைவில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவராகப் பணியாற்றி வந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநராக அண்மையில் திடீரென தூக்கியடிக்கப்பட்ட சம்பவம் ஐ.ஏ.எஸ். வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்த அதிரடி இடமாற்றத்திற்குப் பின்னால் மிகத் துல்லியமான நிர்வாக வியூகம் ஒன்று இருப்பதாகக் கூறப்படுகிறது.
வரும் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் பணிநிறைவு பெறவுள்ள ராதாகிருஷ்ணன், ஓய்வுக்குப் பிறகும் மக்கள் நல்வாழ்வு சார்ந்த ஒரு முக்கியப் பொறுப்பில் நீடிக்க விருப்பம் தெரிவித்ததாகக் தெரிகிறது. இதனையடுத்தே, காலியாக இருக்கும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் பதவியை அவருக்கு அளிக்கும் திட்டம் உருவெடுத்து, அதற்கு முதலமைச்சரின் பச்சைக்கொடியும் பெறப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
மின்சார வாரியத் தலைவராகவே நீடித்துக்கொண்டு அதே ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டால் தேவையற்ற சர்ச்சைகள் எழக்கூடும் என்பதால், முன்எச்சரிக்கையாகவே அவர் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தத் திட்டத்தின்படி, செப்டம்பரில் பணி ஓய்வுபெற்றதும் அக்டோபர் மாதத்தில் அவர் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக முறைப்படி நியமிக்கப்படவுள்ளாராம். இந்த உள்விவரம் அறியாமல், மற்ற மூத்த அதிகாரிகள் இன்னமும் அந்தப் பதவியைப் பிடிக்கக் காய்களை நகர்த்தி வருவதுதான் தற்போதைய சுவாரசியமான திருப்பம்.
