LATEST NEWS
BREAKING: காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு.. தமிழகத்திற்கு மகிழ்ச்சி செய்தி…!!
காவிரி ஆற்றில் தமிழகத்திற்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 27,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மைசூர் அருகே உள்ள கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக, அணையின் பாதுகாப்பைக் கருதி உபரி நீர் முழுவதும் காவிரி ஆற்றில் அப்படியே திறந்து விடப்படுகிறது. காவிரி ஆற்றுப் படுகையில் உள்ள மற்ற அணைகளும் தற்போது வேகமாக நிரம்பி வருவதால், வரும் நாட்களில் தமிழகத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு கபினி அணையில் இருந்து விநாடிக்கு 27,000 கன அடி வீதம் வெளியேற்றப்படும் கூடுதல் தண்ணீர், இன்று மாலைக்குள் தமிழக எல்லையான ஒகேனக்கல்லை வந்தடையும் என அதிகாரிகள் கணித்துள்ளனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளதால், தர்மபுரி மற்றும் மேட்டூர் அணைக்குக் கீழ் உள்ள காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு நீர்வளத்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் ஆற்றைக் கடக்கவோ அல்லது குளிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, இந்த நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து டெல்டா பாசன விவசாயத்திற்குப் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
