LATEST NEWS
“MLA பேரத்தில் பிஸியாக உள்ளாரா புஸ்ஸி ஆனந்த்?.. நயினார் நாகேந்திரன் வீசிய அடுத்த குண்டு.. தமிழக அரசியலில் பரபரப்பு”..!!
திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு அதிரடி கருத்துக்களை முன்வைத்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்கும் விவகாரம் குறித்த கேள்விக்கு, எடுக்கப்பட்ட நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும், சம்பவம் நடந்தபோதே முதல்வர் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் தெரிவித்திருக்கலாம் என்று குறிப்பிட்டார். மேலும், தவெக கூட்டணியில் பயணிக்கும் விசிக தலைவர் திருமாவளவனின் சமீபத்திய பேட்டிகள் குறித்து விமர்சித்த அவர், திருமாவளவனின் கருத்துகள் “பாலுக்கும் காவல், பூனைக்கும் காவல்” என்பது போல் இருப்பதாகவும், எதற்காகத் தவெக கூட்டணிக்குச் சென்றோம் அல்லது ஏன் இன்னும் இங்கு இருக்கிறோம் என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், அதனால்தான் அவர் அங்கும் இங்கும் ஒரு கால் வைத்துள்ளதாகச் சாடினார். வரும் 2029-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராகப் பதவியேற்பார் என்றும், எந்தச் சூழ்நிலையிலும் பாஜக ஆளுங்கட்சியாக வருவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட சர்ச்சை குறித்துக் கூறுகையில், அமைச்சர்கள் பள்ளிகளுக்கு ஆய்வு செல்வது தவறல்ல; ஆனால் குழந்தைகளை அடிமைகளைப் போல நடத்துவதும், அவர்களைக் கட்டாயப்படுத்தி ‘ரீல்ஸ்’ எடுப்பதும் ஏற்க முடியாதது என்று கண்டித்தார். தமிழகத்தில் நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், அவற்றைத் தடுக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, குதிரை பேரம் நடத்தி எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைக்கும் மோசமான அரசியல் இதுவரை தமிழகத்தில் நடந்தது கிடையாது என்று சுட்டிக்காட்டிய நயினார் நாகேந்திரன், தவெக-வின் புஸ்ஸி ஆனந்த் எம்.எல்.ஏ-க்களை வாங்குவதில் பிஸியாக இருப்பதாகவும், நீர்வளத்துறை அமைச்சர் தனது துறையைக் கவனிக்காமல் குதிரை பேரத்தில் ஆர்வம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டினார். இறுதியாக அண்ணாமலை குறித்த கேள்விக்கு, கட்சியில் இல்லாதவர்களைப் பற்றிய கேள்விகள் வேண்டாம் என்றும், தங்களது கட்சியில் இருப்பவர்களைப் பற்றிக் கேட்டால் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறி விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
