LATEST NEWS
“கேட்காமலேயே கிடைத்த மந்திரி பதவி” அவரு போன் பண்ணி கூப்பிட்டாரு… திராவிட கட்சிகளுக்கு செக் வைத்த ஜோசப் விஜய்… உடைத்துப் பேசிய அமைச்சர் விஸ்வநாதன்..!!
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், தமிழக அமைச்சரவையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்களான விஸ்வநாதன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், தமிழக அரசியலின் தற்போதைய சூழல் மற்றும் தவெக அரசில் காங்கிரஸ் பங்கேற்றதன் பின்னணி குறித்துப் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
தேர்தலுக்கு முன்பு தாங்கள் திமுகவுடன் கூட்டணியில் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் முடிவுகளுக்குப் பின் தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் தொலைபேசி வாயிலாக ஆதரவு கோரியதால் காங்கிரஸ் ஆதரவளித்ததாகத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தியிடம் விஜய் மீண்டும் பேசி கேட்டுக்கொண்டதன் பேரில் தான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றோம் என்றும், இது காங்கிரஸுக்குக் காலம் தந்த கொடை என்றும் அவர் நெகிழ்ந்து கூறினார். கடந்த காலங்களில் 1984, 1991, 1996 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமான பல வாய்ப்புகள் இருந்தும், அதிமுக அல்லது திமுக ஆட்சிகளில் பங்கு கேட்டதில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
விக்கிரவாண்டி மாநாட்டிலேயே கூட்டணி ஆட்சி என்று முழங்கிய தவெக தலைவர் ஜோசப் விஜய், தற்போது தாங்கள் கேட்காமலேயே அமைச்சரவையில் பங்கு கொடுத்துள்ளதாக அவர் பெருமையுடன் நினைவு கூர்ந்தார். தமிழகத்தை மாற்றி மாறி ஆட்சி செய்த திமுக, அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளும் கூட்டணி ஆட்சிக்கு ஒருபோதும் இடம் கொடுத்ததில்லை என்றும், ஆனால் இன்று அந்த இரண்டு கட்சிகளுமே இல்லாத ஒரு புதிய அரசியல் நிலை தமிழ்நாட்டில் உருவாகிவிட்டதாகவும் அவர் அதிரடியாகக் குறிப்பிட்டார்.
மேலும், முதலமைச்சர் விஜய் உலகத் தரத்திலான ஒரு பல்கலைக்கழகத்தைத் தொடங்கும் சிந்தனையில் இருப்பதாகவும், வரலாற்றின் அடிப்படையில் பீகார் நாலந்தா பல்கலைக்கழகம் போலக் காஞ்சிபுரத்தில் அந்தப் புதிய பல்கலைக்கழகம் அமைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகவும் அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
