LATEST NEWS
“உண்மையான லேடி சிங்கத்தை பாருங்க” நகரும் பேருந்தை கைகளால் தடுத்து நிறுத்திய பெண் ஏசிபி… வைரலாகும் சிலிர்க்க வைக்கும் வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் விவசாயிகளின் போராட்டத்தின் போது, சற்றும் அச்சமின்றி போராட்டக்காரர்களை எதிர்த்து நின்று பள்ளிப் பேருந்து ஒன்றை மீட்ட பெண் போலீஸ் அதிகாரியின் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது. அங்கு கடந்த சில நாட்களாக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சர் வீட்டை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைப்பதற்காக அங்கிருந்த ஒரு பேருந்தை போராட்டக்காரர்கள் தள்ளிக் கொண்டு முன்னேற முயன்றனர்.
அப்போது, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் (ACP) மோனிகா சுக்லா, சற்றும் யோசிக்காமல் சீறிப்பாய்ந்து வந்து நகர்ந்து கொண்டிருந்த அந்தப் பேருந்தின் முன்னால் நெஞ்சை நிமிர்த்தி ‘சிங்கம்’ பாணியில் நின்றார். போராட்டக்காரர்கள் சூழ்ந்திருந்த போதிலும், தனது முழு பலத்தையும் பிரயோகித்து அந்தப் பேருந்து மேலும் முன்னேறாதவாறு தடுத்து நிறுத்தினார். இவரது இந்தத் துணிச்சலான செயலைக் கண்டு அங்கிருந்த மற்ற காவலர்களும் ஓடிவந்து பேருந்தை மீட்டனர்.
சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோ வேகமாகப் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் இவரை ‘லேடி சிங்கம்’ எனப் பாராட்டி வருகின்றனர். கடமை என்று வந்துவிட்டால் பெண்கள் எவ்வளவு வலிமையானவர்கள் என்பதற்கு ஏசிபி மோனிகா சுக்லா ஒரு சிறந்த உதாரணம் எனப் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரம், கூட்ட நெரிசலில் பேருந்தின் முன்னால் நிற்பது உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கலாம் என்பதால், காவல்துறையினர் தங்களது பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கலவையான கருத்துக்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன
