LATEST NEWS
ஓபிஎஸ் வராவிட்டால் ரவீந்திரநாத் தவெகவில் இணைய திட்டம்.. அப்பாவுக்கு செக் வைக்கும் மகன்.. தமிழக அரசியலில் புதிய பரபரப்பு..!!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோர் திமுகவிலிருந்து விலகி, முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலான செய்திகள் வெளியாகி வருகின்றன. தவெகவில் தங்களுக்குப் போதிய முக்கியத்துவம் கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தகவல் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இருப்பினும், இந்தத் தகவல்கள் வெறும் வதந்தி என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் பொய் என்றும் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தான் தற்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவோ அல்லது தவெகவில் இணையவோ மாட்டேன் என்றும், திமுகவுடனான தனது உறவு சுமுகமாகவே நீடிக்கிறது என்றும் அவர் ஊடகங்களிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதேநேரம், தேனி மாவட்ட திமுகவில் எம்.பி. தங்க தமிழ்ச்செல்வனின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், அங்கு தங்களுக்கு உரிய முக்கியத்துவம் மற்றும் கட்சிப் பதவிகள் கிடைக்கவில்லை என்ற அதிருப்தி ஓபிஎஸ் குடும்பத்தினருக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், தவெக தரப்பில் ஓபிஎஸ்ஸையும் சேர்த்து அழைக்க விரும்பினாலும், சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஓபிஎஸ்ஸுக்குப் பதிலாக அவரது மகன் ஓ.பி. ரவீந்திரநாத் மட்டும் தவெகவில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
