LATEST NEWS
“நாகதோஷம் இருக்கு” அதுக்கு பரிகாரம் பண்ணுவீங்களா..? ஓபிஎஸ் சொன்ன விஷயம்.. இப்போ ஜலதோஷம் தான் அதிகமா இருக்கு ஐயா.. பதிலடி கொடுத்த அமைச்சர் அருண்ராஜ்..!
தமிழ்நாடு சட்டசபையில் இன்று பாம்பு கடி, நாக தோஷம் மற்றும் ஜலதோஷம் குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே சுவாரசியமான கலகல விவாதம் நடைபெற்றது. வினாக்கள் விடை நேரத்தின் போது பேசிய திமுக எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வம், பல்வேறு தொகுதிகளில் பாம்பு கடி அதிகம் உள்ளதாகவும், அங்கு ‘நாக தோஷம்’ இருப்பதாகத் தான் அறிவதாகவும் கூறி, அதற்குப் பரிகாரம் செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், முதலமைச்சர் தலைமையிலான இந்த அரசு அறிவியல் பூர்வமான அரசு என்றும், தங்களுக்குப் பில்லி சூனியம், தோஷங்களில் நம்பிக்கை இல்லை என்றும் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், தற்போது மாநிலத்தில் ‘ஜலதோஷம்’ தான் அதிகமாக இருக்கிறதே தவிர பாம்பு கடிக்குத் தோஷம் இருப்பதாகத் தாங்கள் கேள்விப்படவில்லை என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “பெரியார் இயக்கம் பற்றிப் பேசிய திமுக இன்று தோஷம் பற்றிப் பேசுகிறது; ஆனால் நாங்கள் பெரியார் வழியில் வந்து அறிவியல் பூர்வமாகப் பிரச்சினையை அணுகுகிறோம்” என்று பதிவு செய்தார்.
இந்த விவாதத்தின் இறுதித் திருப்பமாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குறுக்கிட்டுப் பேசினார். தங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் உண்மையாகவே ஜலதோஷத்தைப் பற்றித்தான் கேட்டார் என்று மழுப்பிய அவர், தங்களது எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு கடந்த இரண்டு நாட்களாக நிஜமாகவே ஜலதோஷம் பிடித்து உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது என்றும், அரசு அதற்கும் சேர்த்துத் தான் தீர்வு காண வேண்டும் என்றும் நகைச்சுவையுடன் பதிலடி கொடுத்தார்.
