LATEST NEWS
கேரளாவை உலுக்கிய நள்ளிரவுப் பயரங்கரம்.. அடுத்தடுத்து நிலச்சரிவு – 2 பேர் பலி, 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலையில் பெய்த கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். தொடுபுழா அருகே உள்ள அடூர் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமதி என்ற பெண்ணும், வாகமன் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பிரபாகரன் நாயர் என்ற முதியவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த இயற்கை சீற்றத்தால் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் வயநாடு எல்லைப் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அப்பகுதிகளில் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா உள்ளிட்ட கேரளாவின் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா உள்பட மொத்தம் 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதைகளின் பல இடங்களில் திடீர் மண் சரிவுகள் ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் யாரும் மலைப்பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
