LATEST NEWS
“மக்களுக்குப் பிடிச்சதைத்தான் நாங்க தருவோம்… முடிஞ்சா எதிர்க்கட்சிகள் அதை போட்டுப் பாக்கட்டும்..!” இலவச வேட்டி சர்ச்சையில் ஆஸ்டின் கேள்விக்கு அமைச்சர் விஜய் பாலாஜி கொடுத்த சரமாரி பதிலடி..!!
தமிழக சட்டசபையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக வழங்கப்படும் வேட்டிகளின் அளவை 8 முழத்திலிருந்து 4 முழமாகக் குறைத்துள்ள அரசின் முடிவு குறித்து திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து பேசினார். 1983-இல் எம்.ஜி.ஆரால் கொண்டுவரப்பட்டு கலைஞரால் தொடரப்பட்ட இத்திட்டம் நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு வழங்கவே உருவாக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய புதிய முடிவால் நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். பயனாளிகள் மற்றும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிடம் கருத்து கேட்காமல், சில அதிகாரிகளால் அவசர அவசரமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், கைத்தறி நெசவாளர்களுக்குப் பாதிப்பில்லை என அரசு அறிக்கையில் உண்மை மறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாகர்கோவில், கடலூர், திருச்செங்கோடு, சேலம், காஞ்சிபுரம் ஆகிய 5 சரகங்களில் சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான 8 முழ வேட்டிகள் ஏற்கனவே நெய்யப்பட்டுத் தேங்கியுள்ளதாகவும், நாகர்கோவில் சரகத்தில் மட்டும் ரூ.7 கோடி மதிப்பிலான வேட்டிகள் முடங்கியுள்ளதாகவும் ஆஸ்டின் தெரிவித்தார். புதிய அரசாணையின்படி நூலின் எண் மற்றும் அச்சு அளவு மாற்றப்பட்டதால் நெசவாளர்கள் தறிகளை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், பொங்கலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இந்த தாமதமான முடிவால் தரமும் கூலியும் குறைந்துள்ளதாகக் கவலை தெரிவித்த அவர், தேங்கியுள்ள உற்பத்திகளை அரசு உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், புதிய அரசாணையைத் தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஆஸ்டின் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்த அமைச்சர் விஜய் பாலாஜி, மக்களுக்குப் பிடித்தமான பொருளைத் தரமாக வழங்குவதே அரசின் முதன்மை நோக்கம் என்று விளக்கமளித்தார். மக்கள் 8 முழ வேட்டிக்கு பதிலாக 4 முழ வேட்டியையே அதிகம் விரும்புகிறார்கள் என்பதாலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், வரவிருக்கும் பொங்கலுக்கு ஜரிகை வைக்கப்பட்ட சேலை வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார். “பொங்கலுக்கு அரசு கொடுக்கும் வேட்டிகளை அமைச்சர்களாகிய நாங்கள் அணிந்து வருகிறோம்; கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட வேட்டிகளை எதிர்க்கட்சியினர் அணிய வேண்டும். எது தரமான வேட்டி என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று கூறி அவர் தனது பதில உரையை முடித்தார்.
