LATEST NEWS
“அவர் அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்…” தி.மு.க மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதியை வம்புக்கு இழுத்த மாணிக்கம் தாகூர் எம்.பி… அரசியல் களத்தில் பரபரப்பு…!!
விருதுநகர் இரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் செல்வத்துடன் இணைந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 2023-ஆம் ஆண்டே ‘அம்ருத் பாரத்’ திட்டத்தின் கீழ் இந்த இரயில் நிலையத்தை நவீனப்படுத்த நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், இதுவரை ₹10 கோடி மதிப்பிலான பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
எஞ்சியுள்ள அனைத்துப் பணிகளும் வரும் ஜனவரி மாதத்திற்குள் முழுமையாக முடிவடையும் என இரயில்வே துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்த அவர், இரயில்வே துறையில் ஊழியர்கள் குறைப்பு மற்றும் உஜ்வாலா திட்ட எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை குறைப்பு ஆகியவற்றுக்கு எதிராகக் காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்றார்.
தொடர்ந்து அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசிய மாணிக்கம் தாகூர், பரந்தூர் விமான நிலையத் திட்டம் குறித்துத் தமிழக முதலமைச்சர் தகுந்த முடிவை எடுப்பார் என்றும், மின்சார வாரியத்தில் நிகழ்ந்த கணினித் தரவு வட்டு (ஹார்டு டிஸ்க்) திருட்டு தொடர்பாகத் துறை சார்ந்த அமைச்சர் நிர்மல் குமார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் கூறினார்.
‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தில் காங்கிரஸ் மீது வைக்கப்பட்ட சில விமர்சனங்கள் நியாயமற்றவை என்றாலும், அதைத் தாங்கும் பக்குவம் தங்களுக்கு உண்டு என விவரித்தார். மேலும், தி.மு.க-வின் ஆணவப் போக்கிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளதாகக் சாடிய அவர், முன்னதாக சவால் விட்டபடி ஜனவரி 1 முதல் ஆர்.எஸ். பாரதி அவர்கள் ‘அரை மீசை பாரதி’ என்றே அழைக்கப்படுவார் என்றும், ஆனால் அந்தத் தோற்றம் அவருக்கு நன்றாக இருக்காது என்றும் கிண்டலாகக் விமர்சித்தார்.
