LATEST NEWS
யார் அது.? பழனி முருகன் கோயில் நிலத்தில் ரூ.100 கோடி மோசடி.. சிபிசிஐடி வளையத்தில் உயர் அதிகாரி… கோட்டையை அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்..!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம், போலி ஆவணங்கள் மூலம் தனி நபர்களுக்குச் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது பெரிய அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுவாமிகள் மடத்திற்குப் பாத்தியப்பட்ட இந்த நிலம் அடிமாட்டு விலைக்குக் கைமாறியுள்ள நிலையில், இது அரசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகத் தலையிட்டு தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார்.
இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர், சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனைகளை நடத்தி தீவிர ஆவண ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, முதலமைச்சர் அலுவலகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அறநிலையத்துறை மற்றும் பதிவுத்துறை அதிகார வட்டாரத்தில் உள்ள முருகக்கடவுளின் பெயரைக் கொண்ட உயர் அதிகாரி ஒருவரின் பரிந்துரையே இந்த பிரம்மாண்ட நில ஆக்கிரமிப்பிற்குப் பின்னணியாக இருக்கலாம் என்ற சந்தேக வளையம் வலுத்துள்ளது.
அமைச்சர்கள் மீது நேரடியாக ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை என்ற போதிலும், எதிர்க்கட்சிகள் இதைக் கையில் எடுத்துப் போராட்டங்களை அறிவித்துள்ளதால் கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. இருப்பினும், இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்ற நோக்கில், முதலமைச்சர் இந்த சிபிசிஐடி விசாரணை நகர்வுகளை தினமும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தலைமைச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
