LATEST NEWS
“வெரி சாரி…! 22 ஆயிரம் மட்டும் செலவாகிடுச்சு..!” 15 நாள் கழிச்சு தங்கத்தை ரிட்டர்ன் பண்ணி மன்னிப்புக் கடிதம் எழுதிய ‘நல்ல மனசு’ திருடர்கள்..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம், கரபா மண்டலத்திற்கு உட்பட்ட ராமகஞ்சிராஜு நகரைச் சேர்ந்த நாமாலா கணேஷ் என்பவர், கடந்த ஜூலை 18-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் தனிப்பட்ட பணி காரணமாக வெளியூருக்குச் சென்றிருந்தார். இதனைப் பயன்படுத்திக்கொண்ட திருடர்கள், அன்றைய தினம் இரவில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டிலிருந்த சுமார் 6.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் 50,000 ரூபாய் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். வெளியூரிலிருந்து திரும்பி வந்து பார்த்தபோது வீடு கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த கணேஷ், உடனடியாக இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கொள்ளை நடந்து சுமார் 15 நாட்களுக்குப் பிறகு, யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் திருடர்கள் அதிகாலை வேளையில் மீண்டும் கணேஷின் வீட்டிற்கு வந்துள்ளனர். தாங்கள் திருடிச் சென்ற தங்க நகைகள் மற்றும் மீதமிருந்த ரொக்கப் பணத்தை ஒரு கவரில் வைத்து, அதை கணேஷின் வீட்டு முற்றத்தில் வீசி எறிந்துவிட்டுத் தப்பிச் சென்றனர். அத்துடன், தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டு ஒரு மன்னிப்புக் கடிதத்தையும் அங்கு விட்டுச் சென்றுள்ளனர். அந்த கைப்பட எழுதிய கடிதத்தில், “நாங்கள் செய்தது மிகப்பெரிய தவறு, தயவுசெய்து எங்களை மன்னித்துவிடுங்கள். திருடிய பணத்தில் 22,000 ரூபாயை எங்கள் சொந்தத் தேவைகளுக்காகச் செலவழித்துவிட்டோம். அந்தப் பணத்தை மட்டும் எங்களால் திருப்பித் தர முடியாது. மீதமுள்ள அனைத்து தங்க நகைகளையும் பணத்தையும் திருப்பித் தருகிறோம், வெரி சாரி…” என்று எழுதியிருந்தனர்.
22,000 ரூபாய் பணத்தை இழந்த போதிலும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளும் மீதிப் பணமும் மீண்டும் பத்திரமாகக் கிடைத்ததால் வீட்டின் உரிமையாளரான கணேஷ் நிம்மதி அடைந்தார். திருடிச் சென்ற பொருட்களை 15 நாட்களுக்குப் பிறகு பச்சத்தாபப்பட்டு திருப்பித் தந்து மன்னிப்புக் கடிதமும் எழுதிச் சென்ற இந்த விசித்திரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சமூக வலைத்தளங்களில் தீவிர விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நகைகள் மீட்கப்பட்டபோதிலும், மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டுச் சென்ற அந்த விசித்திரத் திருடர்கள் யார் என்பதைக் கண்டறிய காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
