LATEST NEWS
” அக்கா நான் வெறும் 25 நிமிஷம் தான பேசினேன்” பேரவையில் கோபத்தில் கொந்தளித்த பிரேமலதா… குறுக்கே புகுந்து உதயநிதி நகைச்சுவை பதிலடி..!!
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று மிகக் கடுமையான அரசியல் மோதல்களுடன் அரங்கேறி வருகிறது . தவெக அமைச்சர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகத் தூத்துக்குடி விவகாரம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு எனப் பல்வேறு விவகாரங்களில் காரசாரமான விவாதப் போர் நீடித்துக் கொண்டே சென்றது .
இந்தத் தொடர் வார்த்தை மோதல்களால் அவையின் நேரம் வீணடிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி தேமுதிக பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் அவையில் எழுந்து பேசினார். அவர் பேசுகையில், “தவெக-வும் திமுக-வும் தங்களது கருத்துகளை மட்டும் சுருக்கமாகக் கூறுங்கள்; கடந்த இரண்டு மணி நேரமாக அவையில் ஒரே விஷயத்தைத் தான் மாற்றி மாற்றிக் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று சுட்டிக்காட்டினார். மேலும், “இன்னும் அவையில் 13 பேர் பேச வேண்டியுள்ளது, ஆனால் இதுவரை தம்பி உதயநிதி மட்டும்தான் பேசியுள்ளார்” என்று தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.
பிரேமலதா விஜயகாந்தின் இந்தப் பேச்சைக் கேட்டு அவையில் சிரிப்பலை எழுந்த நிலையில், உடனடியாக எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நகைச்சுவையாகப் பதிலடி கொடுத்தார். அவர் புன்னகையுடன், “அக்கா… நான் அவையில் இரண்டு மணி நேரமாகப் பேசவில்லை, வெறும் 25 நிமிடங்கள் மட்டும்தான் பேசினேன்!” என்று மிக எதார்த்தமாகக் குறிப்பிட்டார் . உதயநிதியின் இந்த சுவாரசியமான மற்றும் கலகலப்பான பதிலால், கடந்த சில மணி நேரங்களாக அவையில் நிலவி வந்த கடுமையான அரசியல் பதற்றமும் அனல் பறக்கும் சலசலப்பும் தற்காலிகமாகத் தணிந்து கலகலப்பான சூழல் உருவானது.
