Uncategorized
தாயை அடக்கம் செய்த அரைமணி நேரத்தில் மகன் செய்த செயல்! குவியும் பாராட்டும், நன்றியும்
சென்னை, பெரம்பலூர் வி.களத்தூரில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அப்பகுதி முழுவதும் காலை மாலை என இரண்டு வேளைகள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகின்றன. இந்த கிருமிநாசின் தெளிக்கும் பணியை அய்யாதுரை என்பவர் ஈடுபட்டு வந்த நிலையில் அவரது தயார் அங்கம்மாள் வயது மூப்பு காரணமாக காலமானார்.

இதையடுத்து தனது தாயார் இறந்த தகவலை உறவினர்களுக்கு தெரிவித்த அய்யாதுரை, யாரும் இப்போது உள்ள சூழலில் நேரில் வரவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதுடன் விரைந்து தனது அம்மாவின் உடலை நல்லடக்கம் செய்தார். அம்மா இறந்திருப்பதால் அய்யாதுரை பணிக்கு திரும்ப குறைந்தது ஒரு வாரம் ஆகும் என நகராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் நினைத்திருந்த நிலையில் உடனடியாக பணிக்கு திரும்பி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். அம்மாவின் மரணம் தனக்கு வருத்தம் தந்தாலும், இக்கட்டான இந்த பேரிடர் காலத்தில் ஊர் சுத்தமாக இருக்கவேண்டும்.

அதற்கு தனது பங்களிப்பை செலுத்த வேண்டும் என்பது தான் தனது எண்ண ஓட்டமாக இருந்ததால் பணிக்கு உடனடியாக திரும்பியதாக அய்யாதுரை கூறியுள்ளார். குறைந்த ஊதியமாக இருந்தாலும் தான் பார்க்கும் தூய்மைப் பணியை நேசித்து செய்வதால் அய்யாதுரையை அப்பகுதி மக்கள் பாராட்டினர். இதனிடையே அதிகாரிகளும் அய்யாதுரையை அழைத்து அவரது அர்ப்பணிப்பு உணர்வுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்தனர்.
