CINEMA
யஷ் ரசிகர்களுக்கு செம ஷாக்..! “டாக்சிக்” ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போன காரணம் என்ன..? அப்செட்டில் கே.ஜி.எஃப் ரசிகர்கள்…!
‘கே.ஜி.எஃப்’ படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, கன்னட நடிகர் யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் ‘டாக்சிக்’. மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இந்தப் படம், 1940-70 காலகட்டத்தில் கோவாவில் நடந்த போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் கதையாகும். நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம், பல மொழிகளில் வெளியாகத் தயாராகி வந்தது.
முன்னதாக, இந்தப் படம் மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் ஜூன் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் ஒருமுறை படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளளது. உலகளாவிய விநியோகம் மற்றும் சர்வதேச சந்தைக்கான ஒப்பந்தங்களை ஒருங்கிணைக்க வேண்டியிருப்பதால், திட்டமிட்டபடி ஜூன் மாதம் படம் வெளியாகாது என்றும், புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் நடிகர் யஷ் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து யஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய சினிமாவின் தரத்தை உலக அரங்கில் உயர்த்த வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதாகவும், ‘டாக்சிக்’ திரைப்படம் உலக அளவில் சரியான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். சில கதைகளுக்கும் பயணங்களுக்கும் பொறுமை அவசியம் எனக் கூறியுள்ள அவர், ரசிகர்களின் ஆதரவுக்குத் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். இதனால் ‘டாக்சிக்’ வருகைக்காக ரசிகர்கள் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
