LATEST NEWS
அரசியல் களத்தில் நிலநடுக்கம்.. சீமானைப் பார்த்ததும் உதயநிதி செஞ்ச மாஸ் ஆக்ஷன்.. ஒரே மேடையில் அரங்கேறிய ட்விஸ்ட்.. திருவேற்காட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!
சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற திமுக தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமணவிழாவில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்ட நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழா அரங்கிற்குள் இருவரும் ஒரே நேரத்தில் வருகை தந்த நிலையில், பரஸ்பரம் வணக்கம் கூறி, கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சீமான் நாற்காலியில் உட்காரச் சென்றபோது, அவரது கையைப் பிடித்து அழைத்துச் சென்ற உதயநிதி, தனது அருகிலேயே அவரை அமர வைத்தார். அதேபோல், எஸ்டிபிஐ கட்சித் தலைவர் நெல்லை முபாரக்கையும் உதயநிதி கை பிடித்து அழைத்துச் சென்று தன் அருகில் அமர வைத்துச் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
தேர்தல் பிரசாரங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் திமுகவின் வாரிசு அரசியல் குறித்தும், உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது குறித்தும் சீமான் தொடர்ந்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்துள்ளார். மேலும், பெங்களூரைச் சேர்ந்த நடிகை ஒருவரைத் தேர்தல் நேரத்தில் திமுக தூண்டிவிட்டு தன் மீது பொய் புகார் கொடுக்க வைப்பதாகச் சீமான் குற்றம்சாட்டியிருந்தார்; இதற்குப் பதிலடியாகச் சீமான் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெரியார் குறித்துப் பேசும் போதெல்லாம் திமுகவினரும் அவருக்குக் கடுமையான விமர்சனங்கள் மூலம் பதிலடி கொடுத்து வந்தனர். இத்தகைய அரசியல் முரண்பாடுகளுக்கு இடையே, முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தற்போது தனது குடும்பத்தினருடன் லண்டன் சென்றுள்ள வேளையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
மேடைகளில் ஒருவரையொருவர் மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசிக் கொள்ளும் இரு துருவங்களான தலைவர்கள், நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட போது காட்டிய இந்த அரசியல் நாகரிகம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அண்மையில் தவெக தலைவர் விஜய், “எதிர்த்துப் பேசினால்தான் எதிர்க்கட்சி” என்று பேசியதற்கு உதயநிதி நன்றி தெரிவித்திருந்த சூழலில், தற்போது சீமானை உதயநிதி தன் அருகில் அமர வைத்துப் பேசியுள்ளார். கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையான மோதல்கள் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் தலைவர்கள் காட்டும் இந்த ஆரோக்கியமான அரசியல் பண்பாடு தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.
