LATEST NEWS
“என்னை கடத்திட்டாங்க.. காப்பாத்துங்க!” நடுரோட்டில் அலறிய சிறுவன்.. நள்ளிரவில் போலீசாருக்கு காத்திருந்த செம ட்விஸ்ட்.. அம்பலமான 12 வயது சிறுவனின் பகீர் லீலை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காக 12 வயது சிறுவன் ஒருவன், தன்னை கடத்திச் செல்வதாகக் கூறி நாடகமாடிய விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது. விடுமுறைக்காகத் தாய் வீட்டிற்குச் சென்றிருந்த சிறுவனை அவனது தாய் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில், தாயும் அவனது மாமாவும் சேர்ந்து அச்சிறுவனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தங்களது வீட்டிற்குப் புறப்பட்டுள்ளனர்.
அவனது தாத்தா வீட்டில் இருந்து புறப்பட்டுச் சுமார் 100 மீட்டர் தூரம் சென்றதுமே, அச்சிறுவன் பைக்கில் இருந்தபடியே சத்தமாக அலறத் தொடங்கியுள்ளான். “என்னை யாரோ கடத்திட்டுப் போறாங்க.. காப்பாத்துங்க! இந்த பைக்கில் உட்கார்ந்திருக்கும் ஆணும் பெண்ணும் கடத்தல்காரர்கள், என்னை வலுக்கட்டாயமாகக் கடத்திச் செல்கிறார்கள்” எனத் தொடர்ந்து கூச்சலிட்டுள்ளான். சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை அவன் இதேபோலக் கத்திக்கொண்டே சென்றதால், வழியில் இருந்த பொதுமக்களும் அக்கம் பக்கத்து வீட்டினரும் அதிர்ச்சியடைந்து உடனடியாகக் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
சிறுவன் கடத்தப்பட்டதாக வந்த தகவலையடுத்து, இரண்டு காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். தீவிரத் தேடுதலுக்குப் பின் நள்ளிரவு 1 மணியளவில் சிறுவன் இருந்த வீட்டைக் கண்டுபிடித்த போலீஸார், அவனிடமும் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அச்சிறுவன், “எனக்குப் படிக்கப் பிடிக்கவில்லை, வீட்டுக்குச் சென்றால் படிக்கச் சொல்வார்கள். அதனால்தான் அப்படி அலறினேன், எனக்குப் பெற்றோர் வீட்டுக்குச் செல்லப் பிடிக்கவில்லை, தாத்தா வீட்டிலேயே இருக்க வேண்டும்” எனத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான். இதையடுத்து, சிலுவாதாலே காவல் எல்லைக்குட்பட்ட இப்பிரச்சினையில், சிறுவன் மீண்டும் அவனது தாத்தா வீட்டிற்கே அனுப்பி வைக்கப்பட்டான்.
